தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Sep 25, 2021, 6:46 PM IST

தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தம்

தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: 1949ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரபட்டது. இந்த சட்டப்பிரிவின்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் அனுமதி இல்லாமல் வனப்பகுதி நிலங்களின் உரிமையாளர்கள், அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது.

இந்தநிலையில், 2011ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, குழுவின் முன் அனுமதியோடு வன நிலங்களின் உரிமையாளர்கள், அதை வேறு ஒருவருக்கு விற்கலாம் என்றும், அதனை வாங்குபவர்கள் அந்த வனப்பகுதியை தானே வைத்து கொள்வதற்கு அரசுக்கோ, குழுவுக்கோ விண்ணப்பம் அளித்து அனுமதி பெறுவதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத விற்பனை

இந்த சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை அண்ணா நகரை சேர்ந்த முருகவேல் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “வனப்பகுதியை சட்டவிரோதமாக வாங்கியவர்கள் குழுவிடம் விண்ணப்பித்து உரிமை பெறுவது என்பது சட்டவிரோத விற்பனைக்கு ஒப்புதல் அளிப்பது போல் இந்த உள்ளது.

தமிழ்நாட்டில் 2002ஆம் ஆண்டு 26 சதவீதம் காடுகள் இருந்தது. தற்போது 20.27 சதவீதமாக சுருங்கி விட்டது. இந்த சட்ட பிரிவினால் காடுகள் அழிக்கபட்டுவிடும் என்பதால், இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். இதை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆறு வாரத்திற்கு தள்ளி வைத்தது.

இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி: இவ்வளவு மதிப்பெண் பெற்றால் மட்டுமே வேலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.