ETV Bharat / state

தனியார் நர்சரிகள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Feb 21, 2023, 10:44 PM IST

Etv Bharat
Etv Bharat

மரக்கன்றுகளை எடுத்துச் செல்ல தனியார் நர்சரிகள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது வனக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் கேரள அரசின் பிரதிநிதியாக எவரும் நியமிக்கப்படவில்லை என்பதால், மார்ச் 16ஆம் தேதிக்குள் பிரதிநிதியை நியமித்து, அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அபாயகரமான மின்வேலிகளால் விலங்குகள் பலியாவதை தடுக்க மின்வேலிகள் அமைப்பது தொடர்பான விதிகளை வகுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விதிகளை இறுதி செய்யும் வரை விலங்குகளுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மின்வேலிகளை அமைக்கும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர். வனத்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து, அபாயகரமான வேலிகள் அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், வனத்துறையில் காலியாக உள்ள 1,163 பணியிடங்களை நிரப்புவதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், தேர்வுப் பணிகளை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில் வனப்பகுதிகளில் தடையை மீறி தனியார் நர்சரிகள் மரக்கன்றுகளை பிளாஸ்டிக் கவர்களில் எடுத்துச்செல்வதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

நர்சரி நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் நர்சரிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை விதித்து அரசாணை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான மனுவை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பாஜக சார்பில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.