ETV Bharat / state

ஸ்டாலினை அநாகரிகமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டிய விவகாரம் - துரைமுருகன் கண்டனம்

author img

By

Published : Oct 26, 2020, 2:49 PM IST

Updated : Oct 26, 2020, 4:07 PM IST

அதிமுகவினர் அநாகரிகமான சுவரொட்டிகளை ஒட்டி அரசியல் செய்வதைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமாக வாக்கு கேட்குமாறும், சொந்த ஆசையை நிறைவேற்ற முற்பட்டு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் முதலமைச்சர் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

Police should take action on  those who pasted substandard posters about dmk leader said dmk gs duraimurugan
Police should take action on those who pasted substandard posters about dmk leader said dmk gs duraimurugan

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிட்டு கேலி செய்யும் விதமாக, கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. முன்னதாக கோவையில் இதுபோன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு திமுகவினர் கோரியிருந்தனர். ஆனால் அவ்வாறு கோரிய திமுகவினர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ள திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்ல முடியாமல் திணறி திண்டாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, இன்றைக்கு ஸ்டாலின் குறித்து தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டி அநாகரிக அரசியல் செய்வதற்குத் தூபம் போடுகிறார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகரிகமான, ஆக்கபூர்வமான, கண்ணியமான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற உயரிய அரசியல் பண்புகளை ஒவ்வொரு தொண்டனின் உள்ளத்திலும் பசுமரத்தாணி போல் பதிய வைத்து அரசியல் செய்தவர்கள் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும்! அவர்களின் வழிநின்று அந்த வழியிலிருந்து பிறழாமல், அணுவளவும் தரக்குறைவான விமர்சனங்களுக்கு இடம் அளிக்காமல் இந்தப் பேரியக்கத்தை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

ஆனால் பதவிக்காலத்தின் முடிவு நெருங்கி, தேர்தலை சந்திக்கும் நெருக்கடியில் இருக்கும் அதிமுக, அச்சடித்தவர் யார் என்ற பெயரே போடாமல் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டுவதும், கழகத் தலைவர்கள் பேசாததை பேசியதாகத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்புவதும் தரங்கெட்ட அரசியலின் உச்சக்கட்டம்! விஷமத்தனமான பரப்புரையை தமிழ்நாடு எந்தக் காலத்திலும் ஏற்காது என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிமுகவினரால் நேற்றைய தினம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கழகத் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக ஒட்டியவர்களே சில இடங்களில் சுவரொட்டிகளைக் கிழித்துள்ளார்கள். பல இடங்களில் காவல் துறையினர் கிழித்துள்ளனர். ஆனால், கோயம்புத்தூரில் உள்ள காவல் துறையினர் மட்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் எடுபிடிகளாக இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

கோவை, குனியமுத்தூர் பகுதியில் மட்டும் இதுபோன்ற சுவரொட்டிகளைக் கிழிக்காமல் வேடிக்கை பார்த்ததால் கழகத் தொண்டர்களே ஆவேசப்பட்டு கிழித்துள்ளனர். பெயர் போடாமல், அநாகரிகமாக தலைவர் ஸ்டாலின் குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்த திமுகவினர் மீதே வழக்குப்பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர். அமைச்சர் வேலுமணி உள்ளாட்சித்துறையை மட்டுமல்ல, காவல் துறையையும் குட்டிச்சுவராக்கி விடுவார் போலிருக்கிறது.

திமுக இதுபோன்ற அநாகரிக அரசியலில் நம்பிக்கையில்லாத கட்சி. ஆகவே இதுபோன்ற சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது. ஆகவே இது மாதிரியெல்லாம் அநாகரிகமான சுவரொட்டிகளை ஒட்டி அரசியல் செய்வதை முதலில் கைவிட்டு ஆக்கப்பூர்வமாக உண்மைகளைப் பேசி மக்களிடம் வாக்கு கேளுங்கள். ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள்.

அவர்கள் உங்களின் வேதனை மிகுந்த ஆட்சிக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். அதை விடுத்து சொல்லிக்கொடுப்போரின் சொந்த ஆசையை நிறைவேற்ற முற்பட்டு, பொறுப்புள்ள பதவியில் முதலமைச்சராக இருக்கும் நீங்கள் வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ஆகவே, இதுபோன்ற தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். கழகத்தினர்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 26, 2020, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.