ETV Bharat / state

ஊர்வல அனுமதி வழங்குவது, மறுப்பது காவல்துறை அதிகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி!

author img

By

Published : Dec 9, 2022, 4:41 PM IST

உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும், மறுப்பதும் காவல்துறையின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை திராவிட தோட்டத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் கோவை நகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அதில் கூலி உயர்வை வலியுறுத்தி, வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை காவல்நிலையத்தில் மனு அளித்ததாகவும், ஆனால் தனது மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஊர்வலத்தை அனுமதிப்பது தொடர்பாக காவல்துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த உத்தரவை காவல்துறை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார்.

வால்பாறையிலிருந்து கோவை வரையான 105 கிலோ மீட்டர் தூரத்திற்கு உரியப் பாதுகாப்பு அளிப்பது என்பது மிகவும் சிரமம் என்றும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, கோவையில் ஊர்வலம் நடத்தத் தகுந்த சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார். வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலம் செல்லும் போது அடர்ந்த காட்டுப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால், வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் மனு நிராகரிப்பட்டதாக தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும், அனுமதி மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் பள்ளி நேரங்களில் குப்பை லாரி இயக்கத்தடை விதிக்கக்கோரி மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.