ETV Bharat / state

சென்னை புறநகர் ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 7:44 PM IST

புறநகர் ரயிலில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபரை மஃப்டியில் பயணித்து கைது செய்த போலீசார்
புறநகர் ரயிலில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபரை மஃப்டியில் பயணித்து கைது செய்த போலீசார்

Chennai Suburban Train: திருமால்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் நடைபெற்ற மூன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபரை சாதாரண பயணிகள் போல ரயிலில் பயணம் செய்த போலீசார் கைது செய்தனர்.

சென்னை: அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சார்ந்த லட்சுமி(69) என்பவர் தனியாக பயணம் செய்து உள்ளார். அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை கேட்டுள்ளார்.

அவர்களிடம் லட்சுமி நகை, பணத்தை மறுத்துள்ளார். இதனால் அந்த மர்ம நபர் லட்சுமி கையில் கத்தியால் கிழித்து விட்டு அரை சவரன் கம்மல் மற்றும் 1120 ரூபாய் பறித்துக் கொண்டு தக்கோலம் ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமியிடம் வாக்குமூலத்தை பெற்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதே போல் கடந்த மாதம் 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருமால்பூர், தற்காலம் ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரயிலில் அரக்கோணத்தை சேர்ந்த சித்ரா(41) என்பவர் தனியாக பயணம் செய்துள்ளார். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர் சித்ராவிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். இது சம்பந்தமாக செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் கடந்த மாதம் 23ஆம் தேதி தக்கோலம், அரக்கோணம் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்த அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த முத்தரசி(28) என்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 4 கிராம் தங்க கம்மலை பறித்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்தும் அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அரக்கோணம் மார்க்கத்திலிருந்து செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை செல்லும் புறநகர் மின்சார ரயில்களில் தொடர்ந்து இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக பயணிக்கும் பெண்களை குறி வைத்து மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி நகைகளை பறித்து வரும் சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பெயரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பெண்களிடம் கத்தியை காட்டி தங்க நகைகளை பறிக்கும் நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தப் தனிப்படையில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவரும், பெண் போலீஸ் ஒருவரும், சுடிதார் மற்றும் சேலை அணிந்து கொண்டு கழுத்தில் கவரிங் நகைகளை அணிந்து கொண்டு பயணிகள் போல் அதிகாலை மற்றும் இரவு நேர ரயில்களில் தனியாக பயணிப்பது போல் பயணித்து திருடனை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு சுமார் 10 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பெண்கள் தனியாக இருக்கும் பெட்டியில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது அவர்களிடம் கத்தியை காட்டி நகையை பறிக்க முயற்சித்த போது பயணி போல் ரயிலில் பயணித்து இருந்த பெண் போலீஸ் இருவரும் மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து அந்த நபரை அரக்கோணம் இரும்புப் பாதை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(39) என தெரிய வந்தது. மேலும் தொடர் விசாரணையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ரயில் பெட்டிகளில் தனியாக பயணிக்கும் பெண்களிடம் தொடர்ந்து நகைகளை பறித்து வந்ததையும் ஆனந்தன் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் ஆனந்தன் மீது அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட ஐந்து வழக்குகள் பதிவு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த பெண் காவலர்கள் கலா, சுஜாதா ஆகியோரை ஏடிஜிபி வனிதா பாராட்டி வெகுமதி வழங்கினார். மேலும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அனைத்து புறநகர் ரயில்களின் பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்புக்கு பெண் காவலர்களை நியமிக்க அனைத்து ஆய்வாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, ரயில்வே ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதே போன்று தனியாக பயணிக்கும் பெண்களை குறி வைத்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக கிடைத்த தகவலில் கவனம் செலுத்தி கடந்த 10ஆம் தேதியிலிருந்து இருந்து 30ஆம் தேதி வரை கண்காணிப்பில் நேற்று அரக்கோணம் வயதினத்தில் இதே போன்று சந்தோஷம் என்பவரை மடக்கி பிடித்துள்ளனர். அந்த நபர் இதே போன்று பல சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

பெண் காவலர்கள் மற்றும் இரண்டு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மிக சாமர்த்தியமாக கொள்ளையனை பிடித்ததுள்ளனர். பெண் காவலர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சென்றதை பாராட்டியாக வேண்டும். ரூட் தல பிரச்சனைகளை தவிர்க்க இப்போது ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க: பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை சாலையின் நடுவில் உள்ள தடுப்பின் மீது மோதி நிறுத்திய ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.