சென்னை: சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை 6ஆவது தெருவில் வசிக்கும் தாரிக் அக்தர் என்பவர் பிராட்வே பகுதியில் துணிக்கடை நடத்திவருகிறார். தாரிக் அக்தர் நேற்று தனது இன்னோவா காரை அவரது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
பின்னர், இரவு பார்க்கையில், கார் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து தாரிக் அக்தர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராயப்பேட்டை காவலர்கள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு ஆய்வு செய்ததில், கார் சென்னை போரூர், காட்டுப்பாக்கம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. கட்டுப்பாக்கம் பகுதிக்கு விரைந்துசென்று காருக்குள் இருந்த நபரை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. ஜாபர் சாதிக் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாரிக் அக்தர் வீட்டில் கார் ஓட்டுநராக வேலை செய்து நின்றுவிட்டதும், தற்போது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திவருவதும் கண்டறியப்பட்டது.
பணத் தேவைக்காக தாரிக் அக்தர் வீட்டில் அவர் காரைத் திருடினார் என்பதையும் காவல் துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து ஜாபர் சாதிக்கை காவல் துறையினர் கைதுசெய்து இன்னோவா காரைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: தாய், மகன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை; தீவிர சிகிச்சையில் தந்தை