ETV Bharat / state

"தமிழக அரசு - ஆளுநர் மோதல் உயர்கல்வி வீழ்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும்" - ராமதாஸ் அறிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 2:21 PM IST

அரசு - ஆளுநர் மோதல் உயர்கல்வி  வீழ்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும்!- இராமதாஸ் அறிக்கை
அரசு - ஆளுநர் மோதல் உயர்கல்வி வீழ்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும்!- இராமதாஸ் அறிக்கை

PMK Ramadoss statement: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், ஆளுநரின் இந்த தலையீடு தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி கடந்த ஆகஸ்ட் 20ஆம் நாள் ஓய்வுபெற்ற நிலையில், புதிய துணை வேந்தரை அடையாளம் காண்பதற்கான 3 உறுப்பினர் தேடல் குழு அதற்கு முன்பாகவே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழக அரசு - ஆளுநர்: தேடல் குழுவுக்கான சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கடந்த ஏப்ரல் மாதமே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் பிரதிநிதியை ஆளுநர் மாளிகை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வுக்குழு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இத்தகைய சூழலில் வரலாற்றில் இல்லாத வகையில், 4 உறுப்பினர்கள் கொண்ட தேடல் குழுவை கடந்த செப்டம்பர் 6ம் நாள் தமிழக ஆளுநரே தன்னிச்சையாக அறிவித்தார். அதில் வழக்கமாக இடம் பெற வேண்டிய 3 உறுப்பினர்களுடன் பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி ஒருவரும் சேர்க்கப்பட்டிருந்தார். இது குறித்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் இரு வாரங்களுக்கு முன் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு வெளியானதற்கு அடுத்த வாரம், கடந்த 13ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை அடையாளம் காண்பதற்கான தேடல் குழு அமைத்து அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆளுநர் மாளிகை அறிக்கையில் இடம்பெற்றிருந்த நால்வரில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி மட்டும் நீக்கப்பட்டு மீதமுள்ள மூவரும் இடம் பெற்றிருந்தனர்.

ஆளுநரின் நிலைபாடு நியாயம் அற்றது: அரசு வெளியிட்ட அந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தான் ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். ஆளுநரின் இந்த நிலைப்பாடு நியாயமற்றது ஆகும். சென்னை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சென்னை பல்கலைக்கழக சட்டத்திற்கு உட்பட்டு தான் அமைய வேண்டும். சென்னை பல்கலைக்கழக சட்டத்தின்படி தேடல் குழுவில் மூவர் மட்டும் தான் இடம் பெற முடியும்.

அதன்படி தான் மூவர் கொண்ட தேடல் குழுவை அமைத்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் சட்டத்தின்படியே உள்ளன. அரசின் அறிக்கையை திரும்பப் பெறும்படி ஆளுநரால் கோர முடியாது.தமிழ்நாட்டின் ஆளுநர் என்பவர் அவரது பதவியின் வழியாக தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைகழங்களில் 21 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கிறார்.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: வேந்தர் என்ற முறையில் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும் தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தேடல் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.

மாறாக, தேடல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசிதழில் வெளியிடும் அதிகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு உண்டு. அதை முறையற்ற செயல் என்று கூறுவதற்கு ஆளுநர் மாளிகைக்கு எந்த அதிகாரமும் கிடையாது.தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தேடல் குழு கடந்த 13ம் தேதி செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

ஆனால், தமிழக அரசின் தேடல் குழுவால் துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் மூவர் பெயர் கொண்ட பட்டியலை ஆளுநர் அவருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது. அது பெரும் சிக்கலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

வளர்ச்சிக்கு உதவாது; மாறாக வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்: இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படும் வரையிலோ அல்லது நீதிமன்றங்கள் தலையிட்டு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வரையிலோ சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இதே சிக்கல் நீடிப்பதால் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் வளர்ச்சிக்கு உதவாது; மாறாக வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.

கடுமையான நிதி நெருக்கடி: 166 ஆண்டுகள் வரலாறு கொண்ட சென்னை பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஊதியம் தருவதற்கு கூட நிதி இல்லாததால் ஓய்வூதிய நிதியம் மற்றும் அறக்கட்டளை நிதியத்திலிருந்து பணத்தை எடுத்து செலவழிக்க வேண்டிய நிலையில் அப்பல்கலைக்கழகம் உள்ளது.

பிற பல்கலைக்கழகங்களின் நிலையும் கிட்டத்தட்ட அவ்வாறாகவே உள்ளது. அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் தான் அரசும், ஆளுநரும் ஈடுபட வேண்டுமே தவிர மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது. சென்னை உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அவற்றின் சட்டப்படி துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக ஆளுநர் ஒத்துழைக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஐடி நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை- காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.