ETV Bharat / state

’கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு எடுப்பார்’ - ஜி.கே. மணி

author img

By

Published : Jan 29, 2021, 2:42 PM IST

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு எடுப்பார் என பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

gk mani
ஜி.கே மணி

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்திற்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக கடந்த ஒரு மாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இதன் ஆறாம்கட்ட போராட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, "வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை மட்டும்தான் பாமக கேட்கிறது. இதனால் மற்ற பிரிவினருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இன்றையப் போராட்டத்தில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனி ஒதுக்கீடு வழங்க காலதாமதம் ஆகும் என்பதால்தான் உள் ஒதுக்கீடு கேட்கிறோம். உள் ஒதுக்கீடு விழுக்காட்டை அரசு முடிவுசெய்யும். நல்ல எண்ணிக்கையில் உள் ஒதுக்கீடு அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். இது தேர்தல் நேரத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் இல்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி சேரும்போதே நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம். தேர்தலுக்கான கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் முடிவெடுப்பார். வரும் 31ஆம் தேதி பாமக நிர்வாகக் கூட்டம் நடைபெறவிருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் அறிக்கையை குடியரசுத் தலைவர் படிக்கிறார்' - திருமாவளவன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.