நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தேர்தல் களம் காண தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியோடு, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி வைத்துள்ளது. மேலும் இந்த கூட்டணி பட்டியலில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணியில் பாமக கட்சிக்கு 7 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது. மொத்தம் 94 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட, தனியார் டிவி பெண் நிருபர் கெளசல்யா பெற்று கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில் மாநிலங்களுக்கு அதிகாரம், வேளாண்மை, கல்வி, மது புகை ஒழிப்பு, முத்தலாக், 7 பேர் விடுதலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா ஆகியவைகள் முக்கிய அம்சங்களாக எடுத்து கொள்ளப்பட்டன.
இதையடுத்து பேசிய ராமதாஸ், தேர்தல் அறிக்கை புத்தகம் 94 பக்கங்களை கொண்டது என்றும் சமூக நீதிக்காக பாமக உழைத்து வருகிறது என்றும் கூறினார். இது குறித்து மேலும் அவர் பேசுகையில்,தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் எனவும், கேந்திரிய வித்யாலயா போல கிராமங்கள் தோறும் இலவச கல்வியை நாங்கள் தருவோம் எனவும் உறுதி அளித்தார்.
தமிழகத்துக்கு வரும் நதிகளின் நதி நீரை முழுமையாக பெற்று தருவோம் என்று கூறிய ராமதாஸ், நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் எனக் கூறினார்.