ETV Bharat / state

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

author img

By

Published : Jun 19, 2023, 7:12 PM IST

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலஜியை நியமித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Petition seeking ban on Senthil Balaji continuing as minister without portfolio Case in Madras High Court
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக் கூடாது! உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், இலாக்காக்கள் பறிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் தொடர தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி மறுத்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமைச்சரவை பொறுப்புகள் மாற்றப்பட்டதால் இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி நீடிப்பார் எனக் கடந்த 16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டுக் காவலில் உள்ள ஒருவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அனுமதியளித்த இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க எதிர்ப்பு.. அமலாக்கத்துறை மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்!

அதில், அமைச்சர் ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம் எனவும், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர ஆளுநர் ரவி அனுமதிக்காதது சரியானது எனக் கூறியுள்ளார். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடர்வது சட்ட விரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற காவலில் உள்ளவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா? கூடாதா? என்பது குறித்து எந்த விதமான நீதிமன்ற தீர்ப்புகள் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ள மனுதாரர், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது எனக் கூறப்பட்டுள்ளது.

அதனால், இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற அரசாணையைத் திரும்பப் பெறத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "அடுத்தவன் காசுல சம்சாரத்துக்கு சேலை வாங்கும் அண்ணாமலை" - கோவை செல்வராஜ் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.