சென்னை பூக்கடை குடோன் தெருவில் உள்ள மளிகை கடைக்கு, கடந்த 21ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி நபர் ஒருவர் வந்தார். பின்பு மளிகை கடை உரிமையாளரிடம் பாதாம், பிஸ்தா என 10 கிலோ பொருள்களை வாங்கினார். பணம் கேட்டதற்கு தன்னுடன் கடையின் ஊழியரை அனுப்பி வைக்குமாறு அந்த நபர் கூறினார்.
அதன்படி கடையின் ஊழியர் ஒருவர் அவருடன் சென்றார். தொடர்ந்து கடையின் ஊழியரை பாதியில் நிறுத்தி விட்டு, அந்த நபர் அங்கிருந்து சென்றார். இதைத்தொடர்ந்து கடையின் ஊழியர், அதன் உரிமையாளர் ஆகியோர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கடைக்கு வந்த நபரின் வண்டி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில், அந்த வாகனத்தின் உரிமையாளர் அசோக் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அசோக் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி பல்வேறு இடங்களில் ரூ.1.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். அவரது மனைவி லட்சுமிக்கும் மோசடியில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அசோக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி லட்சுமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாகன மோசடி: மளிகை கடைக்காரர் தீக்குளிக்க முயற்சி