ETV Bharat / state

மிக்ஜாம் புயல் பாதிப்பு: எம்எல்ஏ கண்டுகொள்ளவில்லை என புகார்.. கவர் செய்த அதிமுக மாஜி அமைச்சர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 7:46 PM IST

people have suffered as water stagnant in residential areas has not been removed even after Michaung cyclone landfall
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீர் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதி

Chennai flood relief work: சென்னை உள்ளிட்ட பகுதிகளை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் கடந்து சென்ற பின்னரும் புயலின் பாதிப்பில் இருந்து மக்கள் முழுவதுமாக மீட்கப்படாத நிலையில் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்களுக்கு நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீர் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதி

சென்னை: மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மதுரவாயல் தொகுதி திமுக எம்எல்ஏ கணபதி அப்பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிடவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிமா நகர், சக்தி நகர் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது வீட்டிற்குள் முடங்கி இருந்த ஒருவர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், பூர்த்தி செய்து தருமாறு முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மின்சாரம் வருவதற்காக வழிவகை செய்யப்படும் என அப்பகுதி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பென்ஜமின் ஆறுதல் கூறினார். மேலும், மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வழிவகை செய்யுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை தற்போதைய எம்எல்ஏ கூட வந்து பார்க்காத நிலையில், முன்னாள் அமைச்சர் வந்து பார்வையிட்டது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்த போது பகுதி கழக செயலாளர் தேவதாஸ், ஒன்றிய கழக செயலாளர் ராஜா உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

காவல் நிலையத்தை சுத்தம் செய்த காவலர்கள்: கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கொரட்டூர் காவல் நிலையத்தையும் வெள்ளம் ஆட்கொண்டது. நேற்று மாலை காவல் ஆணையர் சங்கர் நேரில் வந்து ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று கொரட்டூர் காவல் நிலையத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சுத்தப்படுத்தும் பணியில் காவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டனர்.

வடியாத வெள்ள நீரால் அவதி: சென்னையை அடுத்த குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காடு செல்லக்கூடிய பிரதான சாலை மற்றும் ஜோதி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை நீரில் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை மின்மோட்டார்கள் வைத்து வெளியேற்றி வரக்கூடிய சூழலிலும் தேங்கி நிற்கும் மழை நீரானது குறையாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மணலி பகுதியில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.