ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டு இருந்திருந்தால் ஓபிஎஸ்க்கு மரியாதை இருந்திருக்கும் - ஜெயக்குமார்

author img

By

Published : Sep 16, 2022, 6:05 PM IST

ஒற்றை தலைமையை ஏற்றுக்கொண்டு இருந்திருந்தால் ஓபிஎஸ்க்கு மரியாதை இருந்திருக்கும்

'ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டு இங்கே இருந்திருந்தால் அவருக்குரிய மரியாதை இருந்திருக்கும்' என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: ராமசாமி படையாச்சியாரின் 105ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜெயக்குமார், "ராமசாமி படையாட்சியாரின் 105ஆவது பிறந்த தின விழாவிற்காக அதிமுக சார்பில் மாலை அணிவித்து அவருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டது. ராமசாமி படையாட்சியார் தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர். அது மட்டுமில்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர்.

அவருக்கு புகழ் செய்கின்ற வகையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் கடலூரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. அதோடு சட்டப்பேரவையில் அவரது திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் என்பவர் கோஷ்டி, நாங்கள் கட்சி. கட்சி சார்பில் நாங்கள் வந்துள்ளோம். ஒரு கட்சி மக்கள் பிரச்னைக்காகப் போராட வேண்டும்.

அவருக்கு அவ்வாறு பலம் இருந்திருந்தால் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்திருக்கலாமே, கூட்டம் நடத்துவதற்கு ஆள் இல்லை. பிறகு எவ்வாறு அவர் அதிமுக என்று கூற முடியும். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, பால் விலை உயர்வு என்று மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதை ஒட்டி அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் பிரச்னைக்காக போராடி வருகிறோம்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் அறிக்கை கொடுப்பார். ஒரு வார்த்தை பேசிவிட்டு சென்று விடுவார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர் பலமில்லை, பொதுமக்கள் ஆதரவும் கிடையாது. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் தினகரனடா!

தினகரனுடன் கூட்டு சேர்ந்து பாழாய் போய்விட்டார், ஓ.பன்னீர்செல்வம். ஒற்றைத் தலைமையினை ஏற்றுக் கொண்டு இங்கே இருந்திருந்தால் அவருக்குரிய மரியாதை இருந்திருக்கும். தற்பொழுது மரியாதையினை இழந்துவிட்டார்.

தொண்டர்களை இழந்துவிட்டார். அவரிடம் யாருமே இல்லை. இன்று சோசியல் மீடியாவையும், டிவிட்டரையம் மட்டுமே நம்பி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக போராட்டம் குறித்த கேள்வி… நைஸாக நழுவிய ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.