ETV Bharat / state

ஈபிஎஸ் உடன் இணைவதா?.. வாய்ப்பே இல்லை - ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

author img

By

Published : Jul 1, 2023, 7:08 PM IST

'எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: எடப்பாடி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என்றும் ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டனர் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை - எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைப்பு ரீதியாக உள்ள 76 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'ஒற்றுமை என்ற பெயரால் நாடாளுமன்றத் தேர்தலின் போது, நம்மை தெருவில் விட்டு விடுவார்களோ? என்று நிறைய மாவட்டச் செயலாளர்கள் நினைக்கிறார்கள். ஒருமுறை அனுபவித்த கொடுமையை நம்மை விட ஓபிஎஸ் நன்கு அறிவார். ஆகவே, எடப்பாடி பழனிசாமியுடனும் அவரை சேர்ந்தவர்களுடனும் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சசிகலாவை சந்திக்க காத்திருக்கிறோம்: 'சகோதரி சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டும், அவர் இதுவரை பார்க்க நேரம் தரவில்லை. சந்திக்க அனுமதி தந்தால் சந்திப்போம்' என்றார். 'பாஜகவிற்கு நாம் தோழமையாக இருக்கலாமே, தவிர அக்கட்சிக்கு நாம் தொண்டர்களாக இருக்க முடியாது. அவர்களை (பாஜக) பகைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அதேபோல, அவர்கள் தயவுக்காக காத்திருக்கக் கூடிய அவசியமும் நமக்கு இல்லை' எனத் தெரிவித்தார்.

பழனிசாமி அரசு கவிழ்ந்திருக்கும்: இதன் பின்னர் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'மிகவும் எழுச்சியோடு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்று உள்ளார்கள். திருச்சியில் மாநாடு நடத்தியே ஆக வேண்டும் என்று வைத்திலிங்கம் எங்களிடம் யுத்தத்தையே நடத்தினார். இந்த பன்னீர்செல்வம் ஆதரவு தராவிட்டால், பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும் என்ற நிலை ஒருமுறை ஏற்பட்டது. பழனிசாமி அரசுக்கு எதிராக நாம் அன்று வாக்களித்திருந்தால் பழனிசாமி அரசு கவிழ்ந்திருக்கும். தமிழகத்திற்கு நல்ல காலமும் பிறந்திருக்கும்' என்றும் கூறியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் விரைவில் மாநாடு: நான்காண்டு காலம் பல பாடங்களை அவர் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்த அளவிற்கு துரோகங்கள் நிகழ்த்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அரசின் சித்து விளையாட்டுகளை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். அந்தவகையில், கொங்கு மண்டலத்தில் அடுத்த மாநாடு நடைபெறும் என்று திருச்சி மாநாட்டில் அறிவித்திருந்தோம். கொங்கு மண்டலத்தில் கூடிய விரைவில் மாநாடு நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார்.

ஈபிஎஸ் உடன் இணைவதாக இல்லை; தொண்டர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவாதம்: மேலும் பேசிய அவர், 'எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை’ என்று திட்டவட்டமாக உறுதியளித்தார். மேலும், ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை தங்களுக்கு கற்பித்து விட்டதாகவும், இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை தொண்டர்களுக்கு தான் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற மழைக் கால கூட்டம்... காங்கிரஸ் வியூகம் என்ன? சோனியா தலைமையில் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.