தமிழறிஞர்களுக்கு விருதுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

author img

By

Published : Jan 16, 2023, 12:17 PM IST

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் - மு.க.ஸ்டாலின்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் - மு.க.ஸ்டாலின் ()

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.1.2023) விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தியது.

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி விருது" என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை இரணியன் நா.கு.பொன்னுசாமி அவர்களுக்கும் 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை சி.நா.மீ.உபயதுல்லா அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருதினை ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வாலாஜா வல்லவன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, திரு.வி.க. விருதினை நாமக்கல் பொ.வேல்சாமி அவர்களுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதினை இரா.மதிவாணன் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருது தொகையாக தலா 2 லட்சம் ரூபாய் காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.