ETV Bharat / state

Night curfew: தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?

author img

By

Published : Dec 27, 2021, 5:20 PM IST

அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

Night curfew in TN: தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து வரும் 31ஆம் தேதி நடைபெறும் மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதுபடி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிர்வாக அலுவலகக் கட்டடம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டுவருகிறது.

இதை முதலமைச்சர் ஸ்டாலின் பத்து நாள்களில் தொடங்கிவைக்கவுள்ளார் என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு வளாகத்தில் அத்துறைக்கான தரவு அலகு ஒன்றை இன்று (டிசம்பர் 27) திறந்துவைத்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், "ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 26) மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டார். ஒமைக்ரான் பரவல் காரணமாக மருத்துவமனையில் முதல், இரண்டாம் அலையின்போது ஏற்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார்செய்து வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பிற்கு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளைத் தயார்செய்து வைக்க வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதவரம் அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள், மருத்துவப் பிரிவுகளில் மின்னணு தகவல் பலகை மூலம் தகவல்களை உடனுக்குடன் பெற்று மெட்டா பகுப்பாய்வு முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்திய மருத்துவ முறையின் மூலம் சிகிச்சைகளை மேம்படுத்த ஏதுவாக இந்தக் கல்லூரியில் தரவு மையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ முறைகளின்கீழ் 20 நோய்களுக்கான புள்ளியில் தரவுகளைப் பெற்று உடனுக்குடன் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது, இதற்காக இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால்பண்ணை அருகே 19.6 ஏக்கரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் கட்டப்படும்.

இதற்கான நிர்வாக அலுவலகம் இங்கு திறக்கப்பட உள்ளது. கரோனா இரண்டாவது அலையில் 33 ஆயிரம் நபர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 97 நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்ட 34 நபர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சித்த மருத்துவர்கள் ஆய்வுசெய்த பின்னர் அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்.

உதயநிதி நடத்திய கூட்டம்

எஸ்ஜீன் டிராப் கண்டறியப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா எனக் கண்டறிய மத்திய அரசு அனுமதியளித்துள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படும். இந்த முடிவுகள் வருவதில் காலதாமதம் ஆகிறது. எனவே தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மரபணு மாற்று ஆய்வகத்தின் மூலம் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்து மருத்துவம் அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம்.

மத்திய அரசு இதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும். அதேபோல் பாதிப்பு அதிகம் இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் கரோனா பரிசோதனை 100 விழுக்காடு செய்ய வேண்டும் என எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவோம்.

ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள்தான் விதிக்கப்படுகின்றன. கட்சிப் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிமுகவினர் மலர் வளையம் வைப்பதாகக் கூறி கூட்டமாகச் சென்றனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடந்த திமுக கூட்டம் உள்ளரங்கில் நடந்தது. உள்ளரங்கு கூட்டம் நடத்துவதற்கு யாருக்கும் தடைவிதிக்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். அதனால்தான் அனுமதி கிடைக்கவில்லை.

டி.ஆர். பாலு குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

அரசியல் பொதுக்கூட்டங்கள் திருவிழாக்கள் போன்றவை வெளியிடங்களில் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றி உள்ளரங்கில் கூட்டம் நடத்த எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதில் திமுக உறுதியாக உள்ளது. இளங்கலை மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படவில்லை.

கலந்தாய்வு முடிந்த பின்னர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டுமென திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்து கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. அது வெளியிட்ட பின்னர் அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும்.

15 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜனவரி 3ஆம் தேதி முதலமைச்சர் போரூரில் உள்ள பள்ளியில் தொடங்கிவைக்கிறார். தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து வரும் 31ஆம் தேதி நடைபெறும் மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும் - செந்தில்பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.