ETV Bharat / state

நிலக்கரி ஏல ஒப்பந்தத்தில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்கிடுங்கள் - பிரதமருக்கு CM கடிதம்!

author img

By

Published : Apr 4, 2023, 6:18 PM IST

New
காவிரி

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசின் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து தமிழக டெல்டா பகுதிகளை நீக்கக்கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகியப் பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டாவை சீரழிக்கும் இந்த புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து தமிழக டெல்டா பகுதிகளை நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டாப் பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பாக சமீபத்திய ஏல அறிவிப்பு ஒரு தீவிரமான பிரச்னை. நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2005, கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆகியவற்றின் கீழ் 7வது பாகம் ஏலத்தை மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் கடந்த மார்ச் 29ஆம் தேதி அறிவித்துள்ளது. இதில் நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல், மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில், மைக்கேல்பட்டி - கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை. இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு 4(1) இன் படி, 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது' என்று வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட திட்டங்களில் 'நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்' ஆகியவை அடங்கும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனைகளில் நிலக்கரி படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020-ன் தடைக்குள் அடங்கும். ஆகவே, இந்த ஏல அறிவிப்பு செயல்முறைப்பட்டு, வெற்றிகரமான ஏலதாரர் அடையாளம் காணப்பட்டாலும், சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது. அதனால், தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட வட்டாரங்களைப் பொருத்தவரை இந்த ஏல நடைமுறை வீணான செயலாகும்.

அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்திருந்தால், இப்பிரச்னைகளை தெளிவுபடுத்துவதுடன், ஏலத்திற்கான அறிவிக்கை வெளியீட்டால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தையும் தவிர்த்திருக்கலாம். மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள சுரங்க வட்டாரங்களான வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், ஏலத்தின் 7வது தவணையில் இருந்து விலக்கிட வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசின் தொடர்புடைய பொது அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு, மத்திய அரசு, மாநில அரசில் உள்ள தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை சரி செய்து, தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி திட்டங்களுக்கு அரசு அனுமதி? - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.