ETV Bharat / state

நீட் பயிற்சியை தொடங்கும் தமிழ்நாடு அரசு - அடுத்த ஆண்டு செய்ய வேண்டியது என்ன?

author img

By

Published : Oct 21, 2020, 5:12 AM IST

Updated : Oct 21, 2020, 4:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வரும் நீட் பயிற்சியினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும், சவால்கள் எதிர்கொள்வது குறித்தும் காணலாம்.

neet-coaching-for-govenment-school-students
neet-coaching-for-govenment-school-students

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கு பள்ளிகல்வித் துறை பயிற்சி வழங்கியது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

2018ம் ஆண்டு நடந்த தேர்வுக்கு 9184 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 1391 மாணவர்கள் தகுதி பெற்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 14 ஆயிரத்து 929 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2553 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றனர்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினைஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 132 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 6,692 மாணவர்கள் மட்டுமே தேர்வினை எழுதி உள்ளனர். அவர்களில் 1633 மாணவர்கள் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் 4 பேர் மட்டுமே 501 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

400 முதல் 500 வரை 15 மாணவர்களும், 300 முதல் 400 வரை 71 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லை.

இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் இ பாக்ஸ் நிறுவனத்தினால் நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு கல்வித் துறை சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சி தேவையான அளவிற்கு கை கொடுக்கவில்லை என்பது கடந்தகால தேர்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே அரசு அளிக்க கூடிய இலவச பயிற்சி திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

2017 ஆம் ஆண்டு முதல் ஸ்பீடு நிறுவனத்தால் இரண்டு ஆண்டுகள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டன. ஆனால் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவில்லை. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பறிக்கப்பட்ட பயிற்சியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றாலும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க கூடிய அளவிற்கு அவர்களால் மதிப்பெண் பெற முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் 100 மாணவர்கள் கூட மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் இருந்து சேர முடியவில்லை.

முதுகலை ஆசிரியர் பாலாஜி சம்பத்

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சியினை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து முதுகலை ஆசிரியர் பாலாஜி சம்பத் கூறும்போது, ''நீட் தேர்வுக்கான பயிற்சி ஜனவரி வரை தள்ளிப் போடாமல் நவம்பரில் தொடங்குவதை வரவேற்கிறேன். இதற்குரிய பாடங்கள் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டியது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ படிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கட்டாயம் அரசு கொண்டுவர வேண்டும். இந்த சட்டம் ஆளுநரிடம் இருக்கிறது எனக் கூறாமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அமல்படுத்தினால் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்களுக்கு அதிகளவில் செலவு செய்து பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. ஆன்லைனிலேயே நீட் தேர்விற்கான வீடியோக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பாடத்திட்டத்தை தாண்டி படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இதற்கு 5 அல்லது 6 மாதம் பயிற்சி எடுத்தால் போதாது. முறையான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் முழுவதுமாக படித்தால் போதும் என்ற அளவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தப் பாடப் புத்தகத்தை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவைப்படுவது உடன் மாணவர்களும் அதனைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 2 அல்லது 3 ஆண்டு பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்'' என தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறும்போது, ''கரோனா வைரஸ் தொற்றில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் இருந்தாலும் விடாப்பிடியாக நீட் தேர்வினை மத்திய அரசு நடத்திய தீர்வேன் என இருந்தனர். நீட் தேர்வினை நடத்தி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்

இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீட் தேர்வு முடிவுகள் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியாது என்பது தெரிகிறது.

அரசுப்பள்ளி மாணவர்கள் எப்படியாவது மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் சட்டமன்றத்தில் 7.5 சதவீதம் மருத்துவப் படிப்பில் ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றினர். ஆனால் ஆளுநர் அதற்கு இன்னும் அனுமதி தராமல் இருக்கிறார்.

கரோனா காலத்தில் பள்ளிகளைத் திறப்பது பாடத்திட்டங்களை குறைத்தது போன்றவை குறித்து எதுவும் கூறாமல் நீட் தேர்வுக்கான பயிற்சியை ஆரம்பிப்பதில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு எங்களுக்கு இருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என விரும்பினால் தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

அவ்வாறு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாவிட்டால் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அனுமதி பெற்று, அடுத்தாண்டு அதனை 15 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்விற்கு மாணவர்கள் பள்ளியில் படித்த பின்னர் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும் என்பது தற்போது வந்துள்ள தேர்வுமுடிவுகள் காட்டுகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் பின்னர் தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற பின்னரே தகுதி பெற்றுள்ளனர். எனவே நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கிறோம் என்று கூறுவதை விட்டு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கவும் குறித்த பாடங்கள் திட்டங்களை வெளியிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு 2020: மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி

Last Updated :Oct 21, 2020, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.