ETV Bharat / state

ஆளுநர் மறுப்பால் கௌரவ டாக்டர் பட்டம் பெற முடியாமல் மறைந்தார் தியாகி என்.சங்கரய்யா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 4:00 PM IST

late-sankaraiah-could-not-get-an-honorary-doctorate-due-to-the-governor-refusal
ஆளுநர் மறுப்பால் கௌரவ டாக்டர் பட்டம் பெற முடியாமல் மறைந்த தியாகி சங்கரய்யா!

N Sankaraiah: சுதந்திரப் போராட்டத்தியாகிக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமலிருந்ததால் டாக்டர் பட்டம் பெறாமலேயே சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா மறைந்துள்ளார்.

சென்னை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 2ஆம் தேதி நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவில் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட அரசுப் பல்கலைக்கழகம், தனது விதிகளின் படி உரிய முறையில் நூற்றாண்டைக் கடந்து வாழும் விடுதலைப் போராட்ட வீரரைக் கௌரவிக்கும் வகையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநர் தனது ஒப்புதலை அளிக்கவில்லை. இதனால், விடுதலைப் போராட்ட வீரருக்குப் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்புச் செய்திட இயலாமல் போனது.

சுதந்திரப்போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி ஆளுநருக்கு விடுத்த கோரிக்கையில், 1922 ஜூலை 15இல் பிறந்த மிகச்சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என்.சங்கரய்யா, நம் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி, கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி I-இல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அத்தியாயத்தில் கௌரவ முனைவர் பட்டம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் - வேந்தருக்குச் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார்.

இந்நிலையில், 2.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில் (Senate) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, என்.சங்கரய்யாக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்குமாறு ஆளுநர் – வேந்தர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் எனத் தெரிவித்திருந்தார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கூறும்போது, காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியப் பல்கலைக்கழகத்தால் அவருக்கு அன்று பட்டம் வழங்க இயலவில்லை. இன்று விடுதலைப் பெற்ற இந்தியாவின் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தந்து கௌரவித்து, அதன் மூலம் விடுதலைப் போராட்டத் தியாகியைக் கௌரவித்த பெருமையை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெற வேண்டும் என்று பல்கலைக்கழகம் தீர்மானித்தது. பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க மறுத்து அதன் கல்வியியல் செயல்பாட்டுச் சுதந்திரத்தில் தலையிட்டதுடன், அதன் தன்னாட்சிக்குச் சவால் விட்டுள்ள ஆளுநர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரை அவமதித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநரின் செயலை வரலாறு மன்னிக்காது என்றார்.

ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தியாகி சங்கரய்யா குறித்த தகவல்கள் தனக்குச் சரியாக வரவில்லை எனக் கூறி ஆளுநர் பட்டம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.