மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு - குற்றவாளிகளிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை!

author img

By

Published : May 14, 2022, 6:51 PM IST

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு - குற்றவாளிகளிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை!

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த 7 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய போது அவரது கார் ஓட்டுனரால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த 6 மணி நேரத்தில், கொலை செய்த கார் ஓட்டுனர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவிராய் ஆகியோரை ஆந்திராவில் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்த தம்பதியை செங்கல்பட்டு மாவட்டம் நெமிலிச்சேரியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று தம்பதியின் உடலை மீட்டனர்.

மூன்றாம் நிலை குற்றவாளி : குறிப்பாக தம்பதிகளிடம் அதிக அளவிலான பணம், நகைகள் இருப்பதால் அதை கொள்ளையடிக்க மூன்று மாதங்களாக திட்டமிட்டு தம்பதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கார் ஓட்டுனர் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து இருவரையும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரிக்க 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு அளிக்கப்பட்ட மனுவிற்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் குற்றவாளி கிருஷ்ணா மற்றும் ரவிராயை மயிலாப்பூர் போலீசார் முதற்கட்டமாக தம்பதியை புதைத்த செங்கல்பட்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் இருவரையும் புதைக்கும் அளவிற்கு கச்சிதமாக குழி தோண்டப்பட்டுள்ளதால், வேறு யாராவது இதற்கு உதவி செய்துள்ளனரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே அது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதைக்கும் போது அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிவிஆர் கருவிகளை கிருஷ்ணா உடைத்து எடுத்துச் சென்றதால் அதை மீட்பதற்கான பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தம்பதியை புதைத்தது எப்படி என இருவரும் நடித்துக் காட்டி அதனை வீடியோவாகவும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு: இதனைத் தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டிற்கு கொலையாளியை அழைத்துச் சென்று கொலை செய்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். அதேநேரம், கிருஷ்ணாவின் தந்தை கொலை நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே நேபாளத்திற்கு சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதால், அவரையும் சென்னைக்கு வரவழைத்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரட்டை கொலை வழக்கு தொடர்பான புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் கார் ஓட்டுனர் கிருஷ்ணா கொலை செய்து விட்டு பண்ணை வீட்டிற்கு காரில் செல்வது போல இருக்கிறது. மேலும் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீகாந்த், அனுராதாவை அழைத்து வர கிருஷ்ணா காரில் செல்லும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கில் தற்போது கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகள் இவ்வழக்கிற்கு மிகவும் முக்கியமானது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் காலையில் கொலை செய்து விட்டு கிருஷ்ணா செல்லும் நேரத்தை வைத்தும் ஆதாரங்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை.. தலையை தேடும் பணி தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.