ETV Bharat / state

சென்னை வேளச்சேரியில் வெள்ளம்: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 10:52 PM IST

வேளச்சேரி வெள்ளம் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு
வேளச்சேரி வெள்ளம் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து அனுமதியின்றி வெளியேற்றப்பட்ட மழைநீரினால் வேளச்சேரி பகுதிக்குட்பட்ட சாலை மற்றும் உட்புறச் சாலைகளில் கடுமையான நீர்த்தேக்கம் ஏற்பட்டது என்றும் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட வேளச்சேரி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரினை வெளியேற்றும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று(நவ-4) ஆய்வு செய்தார். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், ஒருசில சமயங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் இன்று (நவ.3) காலை முதலே சென்னையின் புறநகர் பகுதியில், மழையானது விட்டு விட்டு பெய்து வந்தது. குறிப்பாக, வேளச்சேரி பிரதான சாலையில், சிறு மழைக்கே வெள்ளம் சூழ்ந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் தெரிவித்ததாவது, "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.3) காலை முதல் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் குறிப்பாக காலை 9 மணி முதல் 10 மணிவரை ஆலந்தூர் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்குள் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாநகராட்சி பணியாளர்கள் தேங்கியுள்ள மழைநீரினை உடனுக்குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் சாலைகள், உட்புறச் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேக்கமின்றி வடிந்து வருகிறது. இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரினை மாநகராட்சியின் ஒப்புதலின்றி சாலையில் வெளியேற்றப்பட்டது.

ஏற்கனவே அப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், பெய்த மழையினாலும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து அனுமதியின்றி வெளியேற்றப்பட்ட மழைநீரும் சேர்ந்து வேளச்சேரி பகுதிக்குட்பட்ட சாலை மற்றும் உட்புறச் சாலைகளில் புகுந்தது. இதனால் வேளச்சேரி பகுதியில் கடுமையான நீர்த்தேக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று மாநகராட்சி பணியாளர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில், இப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீரினை மழைநீர் வடிகால் மற்றும் மோட்டார் பம்புகள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது.

மேலும், மழைநீர் செல்வதற்கான தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாத ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குளத்தினை ஆழப்படுத்தி, செடிகளை அப்புறப்படுத்தி மழைநீரினை கட்டுப்பாட்டு முறையில் வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ரேஸ் கோர்ஸ் மைதானத்தைச் சுற்றியுள்ள சாலை மற்றும் உட்புறச் சாலைகள் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன" என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு 'ஆரஞ்சு அலார்ட்'.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகுது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.