ETV Bharat / state

தொகுப்பூதிய செவிலியர்கள் பணியிடமாற்ற கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைத்தாக எம்ஆர்பி செவிலியர்கள் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 10:54 PM IST

தொகுப்பூதிய செவிலியர்கள் பணியிடமாற்ற கலந்தாய்வு
தொகுப்பூதிய செவிலியர்கள் பணியிடமாற்ற கலந்தாய்வு

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக எம்ஆர்பி செவிலியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சென்னை: மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அளித்த தொகுப்பூதிய காலிப் பணியிடங்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனரகத்தில் உள்ள தொகுப்பூதிய செவிலியர் காலிப் பணியிடங்களுக்கும் மட்டுமே தற்பொழுது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சண்முகக்கணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்தக் கலந்தாய்வில் காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக எம்ஆர்பி செவிலியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின் கூறும்போது; "தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதை வரவேற்கிறோம். இது ஒரு நீண்ட நாள் கோரிக்கையாகும். எனினும் பணியிட மாற்ற கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

கலந்தாய்வில் ஏற்கனவே இருந்த காலி பணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கபடாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், வெறும் 2 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் 27 காலி பணியிடங்களுக்கு 6 பணியிடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 பணியிடங்களுக்கு 9 பணியிடங்களும், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களுக்கு 16 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளன. இது போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இதே போன்ற நிலை தான் பின்பற்றப்பட்டுள்ளது.

மேலும், பணியிட மாற்ற கலந்தாய்வு விண்ணப்பங்கள் கொடுத்த பல செவிலியர்களின் பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறாமல் அந்த செவிலியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் நடந்த கலந்தாய்வுகளில் முதல் நாளில் பங்கு பெற்று வேறு பணியிடத்தை தேர்வு செய்த செவிலியர்களின் பணியிடங்களை காலி பணியிடங்களாக அறிவித்து மீண்டும் அந்த பணியிடங்களை செவிலியர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் இந்த கலந்தாய்வில் மறுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படை தன்மையற்ற பல குறைகளுடன் நடத்தப்படும் கலந்தாய்வால் செவிலியர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். இதனால் பெரும்பாண்மையான செவிலியர்கள் பணியிடம் ஏதும் தேர்வு செய்யாமல் வருத்தத்துடனும் பெரும் ஏமாற்றத்துடனும் சென்றுள்ளனர்" என தொிவித்தார்.

இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சண்முகக்கணி கூறும்போது; "அரசு மருத்துவக்கல்லூரிகள், பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், ஊரக நலத்துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 18 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மருத்துவக்கல்வி இயக்ககம், பொது சுகாதாரத்துறை அளித்த காலிப் பணியிடங்களை நிரப்புகிறோம்.

அதனைத் தொடர்ந்து நிரந்தரப் பணியில் உள்ள செவிலியர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை, நிலை 2 செவிலியர்களாக பதவி உயர்வு அளிப்பதற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் ஒர் அத்திப்பட்டி; சிட்டிசன் பட பாணியில் காணாமல் போன பரங்கிமலை கிராமம்.. அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.