கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கை கடுமையாக்க இன்று (மே.15) முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல ரோந்து வாகனங்கள் மூலமும் காவல் துறையினர் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். நேற்று (மே.14) மட்டும் ஊரடங்கு விதிகளை மீறிய 2,079 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு, அதில் 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முகக்கவசம் அணியாத 1,346 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 83 பேர், அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக கடைகளை திறந்து வைத்த 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று (மே.15) ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சென்னை காமராஜர் சாலை, காந்தி சிலை அருகே ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "முழு ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த காவல் துறையினர் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ரோந்து வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு விதிகளை மீறி தகுந்த காரணங்களின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும். அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு மக்கள் போதுமான ஒத்துழைப்பை காவல்துறைக்கு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்... விற்பனை தொடக்கம்!