ETV Bharat / state

Mekedatu:வறளும் காவிரி.. அடம்பிடிக்கும் கர்நாடகா! - ஸ்டாலினின் அடுத்த மூவ் என்ன?

author img

By

Published : Jul 3, 2023, 6:47 PM IST

Updated : Jul 3, 2023, 7:48 PM IST

Etv Bharat
Etv Bharat

தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்ட நிலையிலும் வறண்டு கிடக்கும் ஆறுகளும், தரையை வானுக்கு காட்டும் அணைகளும் இந்த ஆண்டும் காவிரி பிரச்சனை எழலாம் என அச்சுறுத்தி வருகின்றன.

சென்னை: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு நடுவே தீராத நீண்ட கால பிரச்னையாக காவிரி விவகாரம் (Mekedatu Dam Issue) உள்ளது. நதிநீர் பங்கீட்டில் தொடர் பிரச்னைகள் இருந்த போதிலும், மழை செழிப்பாக இருக்கும் ஆண்டுகளில் காவிரி கரைகொள்ளாமல் ஓடி வந்து தமிழ்நாட்டை அணைத்துக் கொள்வாள்.

ஏய்க்கும் பருவமழை வறளும் காவிரி: ஆனால், வறட்சி ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாயிகளின் கண்களின் கண்ணீர் தான் பெருகும், காவிரி அல்ல. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே கேரளாவின் சில பகுதிகளில் துவங்கிய நிலையில், தமிழ்நாட்டில் ஒகேனக்கல் அருவிப்பகுதி வறண்டு காணப்படுகிறது. பிலிகுண்டுலுவிலிருந்து ஒகேன்னக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்லும் காவிரியாற்றில் நீர்வரத்து 700 அடியாக குறைந்துள்ளது. இதனால், பரந்து விரிந்த காவிரி சுருங்கி ஓடைபோல காட்சியளிக்கிறது.

என்ன சொல்கிறது கர்நாடகா?: கடந்த ஜூன் 20ஆம் தேதி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் எழுதியிருந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் இரண்டாம் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும், அத்திட்டங்களை தமிழ்நாடு அரசு நியாயப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார். இதனிடையே, காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடமுடியாது என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பகைமை வேண்டாம்-எச்சரிக்கும் தமிழகம்: இவரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்முறைகளை மறந்துவிடக் கூடாது என்றும், பகைமை வளர்க்கும் பேச்சுக்கள் வேண்டாம் எனவும் கர்நாடகாவுக்கு எச்சரிக்கைகள் பறந்த வண்ணம் உள்ளன.

டி.கே.சிவக்குமாருக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், என்ன ஆனாலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அனுமதிக்காது என கூறியுள்ளார். இது தொடர்பாக நாளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இப்பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.

நட்புக்கு மரியாதை கிடைக்குமா?: கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் உடன் திமுகவுக்கு சுமூகமான உறவு உள்ள நிலையில், காவிரி பிரச்னை பேசித் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவிரி பிரச்னை அரசியல் மட்டுமே என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது தற்போதைய பிரச்னை.

இதையும் படிங்க: எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்

Last Updated :Jul 3, 2023, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.