ETV Bharat / state

இளைஞர்களை சிறந்தவர்களாக மாற்றிடவே 'நான் முதல்வன்' திட்டம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Mar 1, 2022, 9:54 PM IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

'நான் முதல்வன்' என்னும் திட்டம் அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில், சிறந்தவர்களாக மாற்றிட வேண்டும் என்கிற அந்த உணர்வோடு தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது' என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 1) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், 'இந்த நாள் என்னுடைய வாழ்விலே ஒரு பொன்னாளாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள் என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் தொடக்க நாள் இது. அதனால் தான் இது, என்னுடைய வாழ்விலே கிடைத்திருக்கக்கூடிய பொன்னாள் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.

தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டிருக்கக்கூடிய நான், அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க, உருவாக்கியத் திட்டம்தான் இந்தத் திட்டம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி, அனைவரும் அனைத்திலும் முதலாவதாக வந்தார்கள் என்ற நிலையை உருவாக்கும் திட்டம்தான் இந்தத் திட்டம், அதுதான் இந்தத் திட்டத்தினுடைய நோக்கம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில், சிறந்தவர்களாக மாற்றிட வேண்டும் என்கிற அந்த உணர்வோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எல்லோரும் பள்ளிக்கல்வியை முடித்துவிடுகிறார்கள். கல்லூரிப் பட்டங்களையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோருக்குமே வேலை கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் அது ஒரு கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது. வேலை இல்லை என்று சொல்லும்போது, சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. இதைக் கேட்கும்போது மிக வருத்தமாகத் தான் இருக்கிறது. பட்டம் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படிப்பு குறித்த தெளிந்த அறிவு எல்லோருக்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

தனித்திறமைகள் அவசியம் தேவை

இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 33 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று நாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இன்னொரு பக்கம், திறமைக் குறைவு பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம். பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமமே இல்லை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், அதே நேரத்தில், அப்படிக் கற்பவர்களுக்குத் தனித்திறமைகள் இல்லை என்பது பற்றியும் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்தியாவைப் பார்த்து உலகநாடுகள் பயப்படுகிறார்கள், இந்தியாவில் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்து பயப்படவில்லை. இந்தியாவில் இருக்கும் இளைய சக்தியின் எண்ணிக்கையைப் பார்த்து பயப்படக்கூடிய பெருமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இந்த இளையசக்தி முழுமையான திறமை கொண்டதாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்படிப்பட்ட குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பதால் பயன் இல்லை - அவர்களை நிறையுடைய மனிதர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். அதற்காகத் தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தான் 'நான் முதல்வன்' என்ற அந்தப் பெயரையும் நாம் சூட்டியிருக்கிறோம்.

ஒளிபடைத்த கண்ணினாய் வா... வா... வா...
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா...
களிபடைத்த மொழியினாய் வா... வா... வா...
கடுமை கொண்ட தோளினாய் வா... வா... வா...
தெளிமை பெற்ற மதியினாய் வா... வா... வா...

என்று பாடினார் மகாகவி பாரதி. இந்தப் பாடலின் இறுதி வரியாக, அதேநேரம் உறுதிமிகு வரியாக ஒரு வரியை எழுதியிருப்பார் பாரதியார். ''நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா வா வா" என்று எழுதினார்.

அத்தகைய ஒரு பெருஞ்செயல்தான் 'நான் முதல்வன்' என்கிற அந்தத் திட்டமாக அமைந்திருக்கிறது. எந்தப் படிப்பில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ - அந்தப் படிப்பில் சேருங்கள். அந்தப் படிப்பு, பட்டம் வாங்குவதற்காக மட்டுமில்லாமல், அந்தப் படிப்பு குறித்த முழுமையான அறிவை நீங்கள் தெளிவு பெற வேண்டும்.

நான் திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். இது மாணவர்கள் அனைவரையும் தகுதிப்படுத்தும் திட்டம். இளைஞர்கள் அனைவரையும் உயர்த்தும் திட்டம். தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும்விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான், இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக நிறுவனங்களை, தொழில் நிறுவனங்களை, அரசு நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்போம். அதற்கான முயற்சியில் நாம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம். அரசு நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், தகுதியானவர்களாக இளைஞர்களை உருவாக்குவதை எனது முக்கியக் குறிக்கோளாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.

கல்வியில் சிறந்தவர்களாக, சிந்திக்கும் திறம்படைத்தவர்களாக, தனித்திறமை கொண்டவர்களாக, தொழில்திறன் கொண்டவர்களாக, நிறுவனங்களை நடத்துபவர்களாக, அவர்களை உருவாக்க எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்கிறேன். படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல. திறமை சார்ந்ததாக மாறவேண்டும். வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாறவேண்டும். நீங்கள் அடையும் உயரம் சலுகை சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாறவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு: 'நான் முதல்வன்' புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.