ETV Bharat / state

திமுக தலைவராக மு.க.ஸ்டாலினின் 5 ஆண்டு பயணம்.. கடந்து வந்ததும், கடக்கப் போவதும் என்ன..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 6:32 PM IST

Updated : Aug 28, 2023, 7:21 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 6ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும் அவரது எதிர்கால திட்டம் குறித்தும் ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை: 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி திமுக. திமுகவின் அதிகாரமிக்க பதவியான தலைவர் பதவியில் அண்ணா மறையும் வரை இருந்தார். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதி தலைவராக பொறுப்பேற்றார். கிட்டதட்ட 50 ஆண்டுகள் திமுகவையும், தமிழக அரசியலையும் தன்னை சுற்றி சுழலும்படி கருணாநிதி வைத்திருந்தார். கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக செயல்பட்டு வந்தார். 2018 ஆக.7ஆம் தேதி கருணாநிதி மறைவை தொடர்ந்து அதே ஆண்டு ஆக.28ஆம் தேதி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது ஆட்சியில் அதிமுக இருந்தது. அதனால், கருணாநிதிக்கு மெரினாவில் சட்டப்போராட்டத்தின் மூலமே இடம் கிடைத்தது. அன்றில் இருந்து பல போராட்டகளை மேற்கொண்டு 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது மாநிலத்தில் இருந்த அதிமுகவையும், மத்தியில் இருந்த பாஜகவையும் கடுமையாக எதிர்த்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதன் பலனாக 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய அளவில் காங்கிரஸ்சிற்கு அடுத்தப்படியாக அதிக இடங்களை திமுக பெற்றதால் தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் கவனம் பெற்றார். ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி பயணம் என்ற பிரச்சார யுக்திகளும் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்றது. இப்படி, திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே தொடர் வெற்றிகளை மு.க.ஸ்டாலின் குவித்துள்ளார். பாஜக எதிர்ப்பு, தொடர் வெற்றிகள் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சவாலாக திகழ்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் மாவட்ட வாரியாகவும், பூத் வாரியாகவும் ஒரு சில முன்னெடுப்புகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் இருந்து அதே கூட்டணியோடு 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக களமிறங்குகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக இந்தியா(INDIA) கூட்டணி அமைத்ததில் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய தலைவர்களில் இன்னும் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக இருக்கலாம் என்றாலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காலதாமதம் ஆகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு குறைவான மாதங்களே உள்ள நிலையில் திமுகவை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் முயற்சியில் திமுக தலைமை இறங்கியுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் தென்மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டர். தேர்தல் பணி வசதிக்காக தற்போதுள்ள 72 மாவட்டங்களை 117 மாவட்டங்களாக பிரிக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இரண்டு ஆண்டு கால ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை மக்களிடம் முறையாக கொண்டு சேர்தல், பொதுக்கூட்டம் ஆகியவற்றை திமுக முன்னெடுக்கவுள்ளது.

செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்
செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 6 ஆண்டின் பயணம் குறித்து பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “எங்களுடைய தலைவராக 6 ஆண்டில் மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாஜகவை எதிர்ப்பதில் மு.க.ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக விளங்கி கொண்டிருக்கிறார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைந்த பெருமைக்குரியவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தேசிய அளவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கு முக்கிய காரணமாக மு.க.ஸ்டாலின் இருப்பார்” என கூறினார்.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், “சிரமமான காலத்தில்தான் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். காலமும், சூழ்நிலைகளும் அவருக்கு சாதகமாக அமைந்தது. தற்போது வரை கூட்டணியை பிளவு இல்லாமல் அப்படியே வைத்துள்ளார். இதுவே அவர் கடந்த பாதைக்கான வெற்றியை காட்டுகிறது. இந்த இரண்டரை கால ஆட்சியில் மக்கள் மத்தியில் ஒரு சில அதிருப்தி இருக்கிறது. அதை நாடாளுமன்ற தேர்தல் முன்பே சரிசெய்ய வேண்டும். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் திமுகவிற்கு ஒரு பங்கு உண்டு. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அதை மு.க.ஸ்டாலின் தீர்ப்பார் என நம்புகின்றேன்” என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும். ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றியாக விளையும். கட்சி உடன்பிறப்புகள் அந்த ஒற்றுமையைக் கட்டிக்காத்து உழைத்திட வேண்டும் என்பது தலைவர் என்ற முறையில் எனது அன்பு வேண்டுகோளாகும். உங்கள் கோரிக்கைகளைக் கவனிக்க நான் இருக்கிறேன். என் வேண்டுகோளை நிறைவேற்ற நீங்கள் இருக்கிறீர்கள். நம் உயிருக்கு உயிராகத் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Last Updated :Aug 28, 2023, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.