ETV Bharat / state

'பெண்கள் பாதுகாப்பிற்கான செம திட்டம்' - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

author img

By

Published : Jan 10, 2023, 9:18 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் சிசிடிவிகளுடனான பேருந்துகள், பேருந்து பணிமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஜன.10) சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற திட்டத்தின் கீழ், 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என 63 இடங்களில் பொருத்தப்பட்ட CCTV கண்காணிப்பு கேமராக்களுக்கான ரூ.4.72 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு (Integrated Command & Control Centre) மையத்தை இரண்டாம் கட்டமாக தொடங்கி வைத்தார்.

2,330 பேருந்துகள்: மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு, நிர்பயா திட்டத்தின் (Nirbhaya Fund) கீழ் சென்னை மாநகர் பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சுமார் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் 2,500 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 66 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று, தற்போது 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் இத்திட்டமானது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் சிசிடிவி: கடந்த 14.05.2022அன்று தமிழ்நாடு முதலமைச்சர், 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, இத்திட்டமானது பரிட்சார்த்த முறையில் (Beta Version) முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் இதுநாள் வரையில் பேருந்துகளிலிருந்து எவ்வித அழைப்பும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இரண்டாம் கட்டமாக கூடுதலாக 1,830 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 2,330 பேருந்துகளில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 2,330 பேருந்துகளில், ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR), 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசர கால பொத்தான்கள் (Panic Button) மற்றும் ஒரு ஒலிபெருக்கியும் ஆக மொத்தம் 2,330 மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR), 6,990 கண்காணிப்பு கேமராக்கள், 9,320 அவசரகால பொத்தான்கள் (Panic Button) மற்றும் 2,330 ஒலிபெருக்கிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

அவசரத்திற்கு போலீசாரை அழைக்கும் வசதி: இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அவசரகால பொத்தானை (Panic Button) அழுத்துவதினால், பேருந்தில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாக ஒலி எழுப்பப்பட்டு ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

'பெண்கள் பாதுகாப்பிற்கான செம்ம திட்டம்' - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
'பெண்கள் பாதுகாப்பிற்கான செம திட்டம்' - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

மேலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கும் தானாகவே ஒரு நிமிட காணொலி காட்சி பதிவை உடனடியாக அனுப்புவதோடு, இப்பதிவு ஆய்வு செய்யப்பட்டு, அசம்பாவிதம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சென்னை பெருநகரக் காவல் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமானது, 5ஆயிரம் சதுர அடியில் இரண்டு அடுக்கு தளம் கொண்ட கட்டடம். மேலும், இந்த மையத்தில் 40 அடி நீளம் x 7 அடி உயரம் கொண்ட காட்சித்திரையுடன் (Video Wall) 16 கணினி இயக்குபவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறை மற்றும் கலந்தாய்வு கூடம் (Conference Hall) அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது, கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத்துறை கே.கோபால், மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.