ETV Bharat / state

மிக்ஜாம் புயல் பாதிப்புகள்: மின் கட்டணம் செலுத்த எந்தெந்த மாவட்டங்களுக்கு காலநீட்டிப்பு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 6:01 PM IST

Etv Bharat
Etv Bharat

TN EB Bills: கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சென்னை: கடந்த டிச.3 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'மிக்ஜாம் புயல்' வலுவெடுத்து டிச.4 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, 'மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 4.12.2023 முதல் 7.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 4.12.2023 முதல் 6.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்' என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் சேலம் மாவட்ட நிர்வாகம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.