ETV Bharat / state

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 1:57 PM IST

Minister Ponmudi appeared in ED Office
விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

Minister Ponmudi appeared in ED Office: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், வழக்கறிஞருடன் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகினார்.

சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது, கனிமவளத்துறை அமைச்சராக தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்பட்டு வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் ,அரசு நிர்ணயத்ததை விட அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு 28.36 கோடி அளவில் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும், அப்போதைய கனிமவளத்துறை அமைச்சர் பொன்முடி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, புகார்கள் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கனிமவளக் கொள்ளையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி, அமலாக்கத் துறையும், இந்த வழக்கு குறித்து விசாரணையை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 17ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது.

மேலும், அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணையும் நடத்தினர். இந்த நிலையில், செம்மண் குவாரி வழக்கில் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதன்படி, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், தற்போது மீண்டும் இன்று (நவ.30) அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகினார். அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: மதுரை மல்லி கிலோ ரூ.1,200க்கு விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.