ETV Bharat / state

உடலுக்கு அரசு மரியாதை என அறிவித்தப் பின்னர் 1,652 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 8:42 PM IST

Etv Bharat
Etv Bharat

Organ transplantation in Tamil Nadu: உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 1652 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவுசெய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பினை பார்வையிட வந்த குஜராத் மாநில மருத்துவக் குழுவினருடனான கலந்துரையாடல் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் திருவள்ளூர் மற்றும் ஆவடி ரயில் நிலையங்களுக்கு “Eat Right Station” என்ற தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குஜராத் மாநில மருத்துவத் துறை அலுவலர்கள் 60 பேர் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பினை பார்வையிட்டனர். அந்த வகையில் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், பூந்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம், தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டுள்ளனர். பின்னர், தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவக் கட்டமைப்புகளை பாராட்டினர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக நமது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட, புற்றுநோய் சிகிச்சைக்காக ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். அதேபோல், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்தவமனையில் டபுள் பலூன் எண்டோஸ்கோப்பி (Double Balloon Endoscopy) கருவி, எம்ஆர்ஐ போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகளை பார்வையிட்டார்கள். தமிழ்நாட்டில் மகப்பேறு மருத்துவம், இருதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுவதை பாராட்டியுள்ளனர்.

‘Eat Right Station’ என்ற சான்றுகள் ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோயில்களில் இருக்கும் உணவு தயாரிப்பு கூடங்களுக்கு இந்த சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய முயற்சியாக திருவள்ளூர், ஆவடி ஆகிய இரண்டு ரயில்வே நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் மூலம் திருமண மண்டபங்கள், கூட்டங்களில் சமைக்கப்படும் உபரி உணவுகள் எடுத்துச் செல்லப்பட்டு தேவைப்படுவோர்களுக்கு வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக ஒரு கோடியே 44லட்சத்து 82ஆயிரத்து 353 குடும்பங்கள் உள்ளன. புதியதாக 7லட்சத்து 70ஆயிரம் குடும்பங்கள் அன்மையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் மூலமும், புதிய காப்பீட்டுத் திட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மூலமும் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, 18.11.2023 அன்று, கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் ஒரே நாளில் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை வழங்கும் முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்களுக்கு அரசு சார்பில் மரியாதை: “தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 23ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்தவர்களுடைய உடல்களுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நான் நேரடியாக தேனி மாவட்டத்தில் உறுப்பு தானம் செய்த ஒருவருடைய உடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தோடு இணைந்து அரசின் சார்பில் மரியாதை செலுத்தினோம்.

அதேபோல் திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரடியாக அரசின் சார்பில் மரியாதை செலுத்தினார் . தற்போது வரை 4 பேருக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 23.09.2023 முதல் தற்போது வரை ஆயிரத்து 652 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்” என அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு பாதிப்பு: “டெங்குவை பொறுத்தவரை இந்தாண்டு 4ஆயிரத்து 745 பேர் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அதற்கான பாதிப்பு என்பது 10ஆயிரம் வரை செல்லும், தற்போது அது குறைத்துள்ளது. இதுவரை நான்கு பேர் டெங்குவினால் உயிரிழந்துள்ளனர். டெங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிராக ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று அறிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு என வைக்கப்பட்ட பெயர்பலகை இன்னும் அப்படியே இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய பிரதமரும் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேசிய மருத்தவ ஆணையம் (National Medical Council) தென் மாநிலங்களில் மேற்கொண்டு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாது என்பது போன்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கு, தேசிய மருத்துவ ஆணையத்தின் கொள்கை சரியாக இருக்காது என்ற மறுப்பு கடிதம் எழுதியுள்ளார். நேற்று (அக்.05) டெல்லிக்கு பட்ஜட் கலந்துரையாடல் கூட்டத்திற்கு சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தேசிய மருத்துவ ஆணையத்தின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ஷவர்மா உணவை சரியான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளோம். அதற்காக அனைத்து கடைகளையும் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. இரவில் மீதமாகும் இறைச்சிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும். எனவே எல்லா ஹோட்டல்களையும் ஆய்வு செய்வது என்பது சரியாக இருக்காது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையா? - எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.