ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகை: சென்னையில் 2,01,050 படிவங்கள் பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jul 27, 2023, 3:23 PM IST

minister subramanian
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Magalir Urimai Thogai - சென்னை மாநகரில் மட்டும் 5,30,572 பேருக்கு மகளிர் உரிமைத்தொகைப் பெற விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக 2,01,050 படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் 'உரிமைத்தொகை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டமானது வரும் செப்.15ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னதாக ஜூலை 24ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவைத் தொடங்கிவைத்தார். தற்போது விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும், சென்னையில் முதல்கட்டமாக 98 வார்டுகளில் மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்களை இன்று(ஜூலை 27) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 3 கட்டங்களாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இதற்காக முன்னரே, விண்ணப்ப படிவங்கள் பொது மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை முகாம்கள் மூலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநரில் 1428 நியாய விலைக் கடைகளில் முதற்கட்டமாக 704 நியாயவிலைக் கடைகளில், இந்தப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1730 விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் சென்னை மாநகரில் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முகாம்களிலும் 2266 பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 704 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள், 1730 தன்னார்வலர்கள், 704 உதவி தன்னார்வலர்கள், 1515 காவலர்கள், 154 நகரும் குழுக்கள் இந்த சிறப்பு முகாம்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நியாயவிலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்கின்ற வகையில் மொத்தம் 1730 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பின்னர், 2வது கட்டமாக முகாம்கள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 16 வரை, 724 நியாயவிலைக் கடைகளில் நடைபெறவுள்ளது.

இரண்டு முகாம்களில் விடுபட்டவர்களுக்காக ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 28 வரை மூன்றாம் கட்டமாக சிறப்பு முகாம்கள் நடைபெறும். சென்னை மாநகரில் மட்டும் 5,30,572 பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக 2,01,050 படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன", என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ED raids: சென்னை வேப்பேரியில் அமலாக்கத்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.