ETV Bharat / state

மாணவனின் மூக்கு வழியாக ‘டீ கப்’ மூலம் செலுத்தப்பட்ட மருந்து; EPS-க்கு அமைச்சர் மா.சு விளக்கம்!

author img

By

Published : Aug 2, 2023, 8:28 PM IST

Etv Bharat
Etv Bharat

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் காகித கப் பயன்படுத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அந்த உடல்நிலை சரியில்லாத மாணவனை அவரது தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுக் குழாய் வழியாக மருந்து செலுத்த அறிவுறுத்தப்பட்டதாக கூறுகின்றனர். இதற்காக, மாணவனின் மூக்கு வழியாக 'டீ கப்' மூலம் மருந்தினை செலுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்” பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியிட்டு விடியா திமுக-வின் ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை இன்றைய நாளிதழ்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

120 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்டார். அரசு மருத்துவமனைகளில் அடிப்படையாகத் தேவைப்படும் பிராண வாயு உபகரணங்களைக் கூட கொள்முதல் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர் காக்கும் பிராண வாயு உபகரணங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைவின்றி கிடைக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மக்கள் உடல் நலன் காப்பதில் அரசியல் செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்து விடாமல், அடிப்படை தேவையான இந்த சிறப்பு முகாம்களையும் உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் நடத்திட இந்த விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு 'காகித கப்' பயன்படுத்தியதாக செய்தி ஊடகங்களில் வெளியானதை அறிந்தவுடன் உரிய விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் விஸ்வநாதன், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று (ஆக.1) நேரில் சென்று விசாரித்துள்ளனர்.

அதில், மாணவன் வி.நேசன் லேசான இளைப்பு நோய் பிரச்னை காரணமாக அவருடைய தந்தை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மாணவனுக்கு நெப்புளுசேஷன் சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு, தண்ணீரில் கழுவப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்ட முகக்கவசத்தை அணிய மறுத்த மாணவன் தந்தை, அவர் வைத்திருந்த பேப்பர் கப்பை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வலியுறுத்தியுள்ளார்.

அவர் வற்புறுத்தல் காரணமாகவும், மற்ற நோயாளிகள் சிகிச்சைக்கு காத்திருந்ததால் அவர் கூறியவாறு செவிலியர் செய்துள்ளார். உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பெரியவர்கள் முகக்கவசம்–5, சிறியவர்கள் முகக்கவசம்-4 என போதுமான அளவு கையிருப்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில், கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Asian hockey championship: வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.