ETV Bharat / state

பாலியல் வன்கொடுமைகளில் இருவிரல் பரிசோதனை வேண்டாம்.. -உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு

author img

By

Published : Jul 10, 2023, 7:59 PM IST

இருவிரல் பரிசோதனையை தவிர்க்க உத்தரவு
இருவிரல் பரிசோதனையை தவிர்க்க உத்தரவு

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்று தமிழக காவல்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தை கையாளுவது குறித்த வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்து வருகிறது. சிதம்பரத்தில் கடந்த 2022ம் ஆண்டு சிறுமி காணாமல் போனதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த காவல்துறை, சிறுமி காணாமல் போகவில்லை என்றும் விருப்பத்துடன் ஒருவருடன் சென்றதாக அறிக்கையை ஏற்று வழக்கை காவல்துறை முடித்தது.

இதுபோல, தருமபுரியில் இருந்து இரு பெண்கள் சென்னைக்கு வந்ததும், பிறகு இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வந்த நிலையில், சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதனையடுத்து, தருமபுரி இளம்வயது திருமணம் தொடர்பான வழக்கில், 17 வயதுக்குட்பட்ட இருவரையும் பாதுகாப்பு என்ற பெயரில் காப்பகத்தில் அடைத்து வைத்திருந்ததும், காவல்துறையினர் நடத்திய விதம் குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை குழந்தைகளாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவி கொலை வழக்கு; குண்டாஸில் அடைத்த கமிஷனரின் உத்தரவு ரத்து!

கடந்த 2010ம் ஆண்டு முதல் 1,728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 1,274 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், 29 வழக்குகள் புதுச்சேரி, காரைக்கால் ஏனாம் பகுதியில் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகிள், மனம் விரும்பி சென்றதாக சிறுவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆகஸ்ட் 11க்குள் தெரிவிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டனர். மேலும் இதுபோன்று வழக்குகளை பிரித்து விசாரிக்கும் போது, விரைவில் நியாயம் வழங்க முடியும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல, சிறுவர்களின் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்யப்படுவதை தவிர்க்கும்படி, காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கடந்த 2023 ஜனவரி 1 முதல் எத்தனை பரிசோதனைகள் நடத்தப்பட்டது என்பது குறித்து முழு அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், ஆண்மைத்தன்மை சோதனை செய்வதில் அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? - ஓபிஎஸ் அடுக்கடுக்கான கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.