ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம் - ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைப்பு!

author img

By

Published : Mar 29, 2023, 4:33 PM IST

mhc
வேங்கைவயல்

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், புகார் அளித்து 90 நாட்கள் கடந்தபோதும், வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை எனவும், முறையாக விசாரணைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருவதாகவும், அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி என்பது இன்னமும் தொலைதூர கனவாக உள்ளதாகவும், பட்டியலின மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருவதாகவும், தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை என்றும், கண்துடைப்புக்காக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அமர்வில் இன்று(மார்ச்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவதாகவும், உயர் அதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என வேதனைத் தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒருநபர் ஆணையத்துக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக வேங்கைவயல் சம்பவத்தில் போலீசார் குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டினர். இந்தச் சம்பவம் தொடர்பாக தலித் அறிவுசார் கூட்டமைப்பின் உண்மை கண்டறியும் குழு கள ஆய்வு மேற்கொண்டது. அதில், வேங்கைவயல் சம்பவத்தில் காவல் துறையினர் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டதும், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: 'வேங்கைவயலில் போலீசார் பாதிக்கப்பட்ட மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியுள்ளனர்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.