ETV Bharat / state

M.B.B.S., B.D.S மருத்துவப் படிப்பிற்கு அடுத்த வாரம் முதல் விண்ணப்பம்!

author img

By

Published : Jun 15, 2023, 8:44 PM IST

Minister Maa Subramaniyan press meet
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துப்படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு அடுத்த வாரம் விண்ணப்பம் வழங்கப்படும் எனவும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து, மாணவர்களுடன் தாெலைபேசி மூலம் பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்பாேது, ''மனநல ஆலோசனைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் சேவை மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கத் தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

2022ஆம் ஆண்டில் 1100 அழைப்பு மையம் மூலம் 60 மனநல ஆலோசகர்களைக் கொண்டு இச்சேவை விரிவுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் நட்புடன் உங்களோடு மனநல சேவை “14,416” தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மனநல மருத்துவர்களைக் கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 104 மருத்துவ உதவி தகவல் மையம் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கத்தின்படி, இந்தாண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே மாதம் 18ஆம் தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்மூலம் இதுவரை 54,374 மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 177 மணவ மாணவியர்கள் அதிக மனநல அழுத்தத்தில் (High Risk Students) உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது மாவட்ட அளவில் இருக்கும் மனநல ஆலோசகர்களை அந்த மாணவர்களின் இல்லங்களுக்கு அனுப்பி அவர்களின் மூலமாகவும் நேரடியாக மனக்குறை மற்றும் மன அழுத்தத்தைப் போக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 54 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சிப் பெறாத மாணவர்களின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். அவர்கள் மதிப்பெண்கள், அவர்களுக்கு அடுத்தடுத்து செய்யப் போகின்ற விஷயங்களை குறித்து ஆலோசித்து மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கு இதில் அதிக அளவு மாணவர்களை கடிந்து கொள்ளாமல் இருக்கவும், அவர்களுக்கு கவுன்சிலிங் என்ற வகையில் இந்த சூழலை எடுத்துச் சொல்லி அடுத்தடுத்து இருக்கிற வாய்ப்புகளும் எடுத்துச்சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வு பொறுத்தவரை பெரிய அளவில் தமிழகத்தில் முக்கியத்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. நீட் தேர்வு முடிவில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், கௌஸ்தவ் பௌரி, சூர்யா சித்தார்த், வருண் ஆகிய 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்காலத்தில் இன்னமும் கூடுதலாக சாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து மாணவ மாணவியர்கள் தங்களுடைய கூடுதலாக படிக்கும் எண்ணத்தை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும், மன அழுத்தத்தைப் போக்கவும் இந்த நிகழ்ச்சியை அதிகாரிகளின் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு முதலமைச்சர் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வில் சாதித்த மாணவர்களை முதலமைச்சர் அழைத்துப் பாராட்டுவார். நீட் தேர்வில் விலக்கு பெறுவதில் தமிழ்நாடு மிக உறுதியாக இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அனுப்பப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரிடம் இருந்து உள்துறை மற்றும் மருத்துவத்துறையால் ஏற்கனவே விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் சார்பில் மீண்டும் விளக்கம் கேட்டக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சரிடம் ஆலோசித்து அதற்கும் பதில் அளிக்க உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு விலக்கு கேட்டு அனுப்பிய மசோதா இன்னும் செயல்பாட்டில் உள்ளது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒடிசா மாநிலத்திலும் 100 சதவீதம் விலக்கு வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் நாங்கள் காத்திருக்கிறோம் என்றிருக்கிறார்.

தமிழ்நாட்டுப் பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் நீட்டில் இருந்து விலக்கு பெற அனைத்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆயுஷ், உயர் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக பல விளக்கங்களைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். குடியரசுத் தலைவர் மூலமாக அனுப்பி பல விளக்கங்களைக் கேட்டுள்ளோம், நிச்சயம் ஏதாவது ஒரு நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை, ஒன்றிய அரசு 15 சதவீதத்திற்கான கலந்தாய்வு நடத்திமுடித்தவுடன் தான் தமிழ்நாடு அரசின் 85 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு இந்தாண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதத்திற்கும், 85 சதவீதம் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இதற்கான விதிமுறைகள் தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட காலதாமதத்தையும் தவிர்த்து உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப்படும். மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளர் அவர்களிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கும் பணியினை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காலதாமதமின்றி உடனடியாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்படும்.

மேலும், இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவப் படிப்பு இடங்களும், அரசு புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கே.கே.நகர் ESI மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங்கள் என மொத்தம் 500 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் காலிஆகாமல் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப்படிப்புகளுக்கு வரும் திங்கள் கிழமை முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.