ETV Bharat / state

மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 20ஆம் தேதி கல்லூரி!

author img

By

Published : Jan 18, 2021, 9:09 PM IST

மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 20ஆம் தேதி கல்லூரி!
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 20ஆம் தேதி கல்லூரி!

சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வர வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவக்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18 தேதிமுதல் ஜனவரி 13ஆம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதில், எம்.பி.பி.எஸ்.,பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான இருப்பிடச்சான்று, சாதி சான்றிதழில் பல்வேறு தவறுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டன.

கலந்தாய்வின் போது சந்தேகத்திற்கு உரிய சான்றிதழ்கள் குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு,பின்னர் மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. கலந்தாய்விற்கு பின்னர் கல்லூரியில் சேரும்போது மாணவர்கள் முறைகேடு செய்தால் அதனை கண்டறியவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்ந்த விபரங்களை அளிக்க வேண்டும்.

மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த அறிக்கையை சமர்பிக்கும்போது அவர்களின் முழு உடல் பரிசோதனை சான்றிதழை சமர்பிக்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பெற்றோர்களின் விருப்ப அனுமதியுடன் கரோனா தடுப்பூசிகளை போடலாம்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வதை கண்காணித்து தடுப்பதற்கும், மருத்துவப்படிப்பு குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் குழுக்களை அமைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரையில் அறிமுக வகுப்புகளை நடத்த வேண்டும். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 2ஆம் தேதிமுதல் மாணவர்களுக்கான பாட வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

மாணவர்களின் சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்வதற்காக அவர்களின் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

ஐஆர்ஐஎஸ் ஸ்கேனிக் மற்றும் புகைப்படத்தினையும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் இடது மற்றும் வலது கைரேகை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரின் கைரேகையும் தனித்தனியாக சாிபார்த்து அதன் அறிக்கையை மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.