ETV Bharat / state

மக்களுக்கு உதவ மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம் - கமல்ஹாசன் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 1:14 PM IST

Makkal Needhi Maiam Party leader Kamal Haasan said conduct a medical camp for flood affected people
மக்களுக்கு உதவ மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம்

Makkal Needhi Maiam: மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “துணிச்சலோடு களத்தில் இறங்கி, மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தைப் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டுகிறேன்.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு கனமழை பெய்திருக்கிறது. இது ஒரு சவாலான காலகட்டம். பருவநிலை மாற்றங்களால் இது போன்ற பேரிடர்கள் எதிர்காலத்தில் அடிக்கடி நிகழும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கு நாம் தயாராக வேண்டும். குறுகிய கால அவகாசத்திற்குள் அதிக அளவு மழைப்பொழிவு என்பது சமீப காலமாக வடஇந்தியாவிலும், உலகின் சில நாடுகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை.

நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதும், நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதும்தான் இப்போது அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் முறையாக கிருமி நீக்கம் செய்த பிறகே பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் இது போன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கவும், நிகழ்ந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான வழிமுறைகளை இதற்குரிய நிபுணர்களுடனும், அறிஞர்களுடனும் அரசு கலந்து பேசி, புதிய வழிவகைகளைக் காண வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மீட்புப் பணிகளில் பல்வேறு வகைகளில் உதவி கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் செய்து வரும் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் பவுடர், அரிசி, கோதுமை, ரவை, டீத்தூள், சர்க்கரை, உப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பையைக் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.

இன்னும் நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. சூழலை ஆராய்ந்து, எங்கே என்ன தேவைப்படுகிறதோ, அங்கே அவற்றைக் கொண்டு சேர்க்க ஒரு தொடர்பு மையம் அமைத்துள்ளோம். ஒரு சமையற்கூடம் அமைத்து தினமும் 5 ஆயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யும் பணியை இன்று முதல் தொடங்குகிறோம். நிலைமை சீரடையும் வரை இந்த சமையற்கூடம் செயல்படும்.

மழை வெள்ளத்தின் காரணமாக மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதால், வரும் நாட்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.

இந்த நிவாரணப் பணிகளில் பொதுமக்களும், தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்து செயல்பட்டு, நிலைமை சீரடைய உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய்.. பசுமைத் தீர்ப்பாயம் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.