ETV Bharat / state

ரூ.4,500 கோடி மணல் கொள்ளை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம் - முழு விவரம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 1:18 PM IST

Updated : Nov 28, 2023, 2:44 PM IST

Etv Bharat
Etv Bharat

Madras High court: தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழக அரசு: இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது. சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அமலாக்கத் துறை ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அமலாக்கத் துறையும் மறுக்கவில்லை. குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது.

பல மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அமலாக்கத்துறை: அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவரங்களை அரசிடம் கேட்டும் இன்னும் அவை வழங்கப்படவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான விவரங்களை விசாரணைக்கு உதவியாகத் தான் கேட்கப்பட்டது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிறகு எதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் இருக்கிறது. என்ன ஆதாரம் அமலாக்கத்துறையிடம் இப்போது உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமலாக்கத் துறை தரப்பில், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், செயற் பொறியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணை தான் இது என்றார். தற்போது சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணை தான் நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத குவாரி நடப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநில அரசு கூறியிருக்கிறது.

மாநில அரசு தனியாக விசாரிப்பதை தடுக்கவில்லை. கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை. மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த விசாரணையை மாநில அரசு தடுக்க முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து குவாரிகளின் விவரங்களையும் எப்படி கேட்க முடியும். சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ள வழக்குகளின் விவரங்களை மட்டும் கேட்கலாம். அந்த தகவல்களை தராவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றனர்.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 1 யூனிட் மணல் விற்பதன் மூலம் 1,900 ரூபாய் அரசுக்கு வருகிறது. ஆனால் 20 ஆயிரம் ரூபாய் வரை தனியாருக்கு செல்கிறது. இந்த விவரங்களை சேகரிக்க அதிகாரம் உள்ளது. சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் இல்லை என மாநில அரசு கூற முடியாது. இந்த சட்டவிரோத மணல் விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்து அமலாக்க துறை விசாரிக்க முடியும்.

தமிழகம் முழுவதும் உள்ள 28 குவாரிகளில் நடத்திய சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், 4,500 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது என்றார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர் தவே, அரசு யாரையும் பாதுகாக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? என்றார்.

தொடர்ந்து பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அமலாக்கத் துறையிடம் சாட்சியம் அளித்த அரசு அதிகாரி, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்படாத அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல தெரிவித்தார்.

ஏராளமான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரணை செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்து விசாரணை நடத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக தமிழக அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஏன் அமலாக்க துறைக்கு வழங்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.

சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டினால், அந்த முதல் தகவல் அறிக்கைக்ளை வழங்க தயார் என துஷ்யந்த் தவே தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை தள்ளிவைத்தனர். இதற்கிடையே அமலாக்கத் துறை ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டதாகவும், நீர்வளத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர்?: விசாரணைக்கு ஆஜராகி இருந்த அதிகாரி ஒருவர், ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாகிவிட்டதாகவும், பின்னர், அமலாக்கத் துறை முன் ஆஜரான அவர், திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, செல்போனை அணைத்து வைத்து விடும்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் அறிவுறுத்தியதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி என்பவர், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என அரசு அதிகாரி ஒருவரிடம் மறைமுகமாக தெரிவித்ததாகவும், அதையும் மீறி தான் விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்க துறையிடம் வாக்குமூலம் அளித்த மேலும் சில அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்டவிரோதமாக அதிக அளவில் மணல் அள்ளுவதை தெரிந்தும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்ததால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்ததாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோதமாக மணல் கொள்ளையை அனுமதித்ததன் மூலம், தவறு செய்து விட்டதாக கூறிய நீர்வளத்துறை அதிகாரிகள், மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பாவார்கள் எனவும் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், உரிமம் பெற்றுள்ள 28 சுரங்கங்களிலும் அமலாக்கத்துறையின் நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு நடத்தியதில், 195.37 ஹெக்டேர் பரப்பளவில் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக, 987.01 ஹெக்டேர் நிலப்பரப்பில் மண் அள்ளப்பட்டுள்ளது எனவும், நீர்வளத்துறை ஆவணங்களில், 4.05 லட்சம் யூனிட் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மணல் மூலம் கிடைத்த வருவாய் 4 ஆயிரத்து 730 கோடியாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் மணல் மாஃபியாக்கள் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களின் பெயரை நேரடியாக குறிப்பிடப்படவில்லை என அமலாக்கத் துறை மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதனால், மணல் கொள்ளையை மறைக்க முயற்சிக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்குகளை அதிக அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை ஆட்சேபனை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்ளித்த நீதிபதிகள், ஆவணங்களையும், விசாரணையையும் தொடர அரசிடம் அமலாக்கத்துறை கோரிக்கை மட்டுமே வைக்கலாம். அவர்களே தன்னிச்சையாக விசாரணை தொடர முடியாது. தனிப்பட்ட முறையில் அமலாக்கத்துறைக்கு விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. அவ்வாறு அனுமதித்தால் இந்திய அரசியலமைப்பு மாநில அரசுக்கு வழங்கிய அதிகாரத்தில் தலையிடுவதாக அமைந்துவிடும். குறிப்பிட்ட சில குற்றங்கள் நடைபெறும் போது மட்டுமே அமலாக்கத்துறை தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம்.

4,730 கோடி ரூபாய் மணல் கொள்ளை மூலம் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறுகிறது. மணல் கொள்ளையை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் படு கொலை செய்யப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் மணல் கொள்ளை மூலம் கைமாறியுள்ளது. அதனால், ஏன் விசாரணை நடத்தக் கூடாது? என மாநில விசாரணை அதிகாரியிடம் வலியுறுத்தலாம். அமலாக்கத்துறை தனிப்பட்ட விசாரணையில் யாரும் தலையிடவில்லை. ஆனால், மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட அதிகாரிகளிடம் ஆவணங்களை கேட்க உரிமையில்லை.

மாநில அரசின் நிர்வாகங்களில் அமலாக்கத்துறை தலையிட முடியாது. குறைந்த அளவிலேயே விசாரணை அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் வழங்கிய அமலாக்கத்துறை உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவிற்கு 3 வாரங்களில் அரசும், மாவட்ட ஆட்சியர்களும் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Last Updated :Nov 28, 2023, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.