ETV Bharat / state

வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 3:46 PM IST

Chennai Flood Relief Funds: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியா மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Chennai Flood Relief Funds
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: தலைமைச் செயலகத்தில் வெள்ளம் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள், நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்றைய முன்தினம் டிசம்பர் 9ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையான ரூபாய் 6 ஆயிரம் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசால் வழங்கப்பட உள்ள நிவாரணத் தொகையான ரூபாய் 6 ஆயிரம் பணத்தை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "தமிழக அரசு வெள்ள நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு வழங்குவது பாராட்டலுக்குரியது. ஆனால், அந்த நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் வழங்காமல் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கின் மூலமாக வழங்க வேண்டும்.

ஏனெனில், ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகையை ரொக்கமாகக் கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தோடு, நியாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அச்சம் உள்ளது.

மேலும், பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு, நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த பணத்தையும் வங்கிக் கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்த வித சிரமும் இருக்காது என நம்புகிறேன். ஆகவே, தமிழக அரசால் வழங்கப்பட உள்ள வெள்ள நிவாரணத் தொகையான ரூபாய் 6 ஆயிரம் பணத்தை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரைஞாண் கயிற்றுக்கு டேப் ஒட்டிய அதிகாரிகள் - NET தேர்வெழுதச் சென்றவருக்கு அதிர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.