ETV Bharat / state

திருமங்கலம் காவல் ஆய்வாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

author img

By

Published : Jul 27, 2023, 6:59 PM IST

காணாமல் போன இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தர வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத சென்னை திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளருக்கு அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.இளவேனில் என்பவர் தான் வசித்துவரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நிறுத்திவைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய ராயல் என்பீல்ட் பைக்கை காணவில்லை எனக் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யவும், வாகனம் கிடைக்காவிட்டால் "வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை" எனச் சான்றிதழ் வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், வாகனத்தைத் திருடியவர்களைக் கைது செய்ய வேண்டும், காப்பீடுத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்காக "வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என காவல்துறை சான்றிதழ் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என திருமங்கலம் காவல் ஆய்வாளர் வேல்முருகனுக்கு எதிராக இளவேனில் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.சந்திரசேகரனிடம் விசாரணைக்கு வந்தது.அப்போது இளவேனில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , வாகனத்தை கண்டுபிடிக்கவோ அல்லது சான்றிதழ் வழங்கவோ ஒரு மாத கால அவகாசம் வழங்கிய நிலையில், பல முறை கேட்டும், அதை வழங்க முன்வரவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆனால் ஆய்வாளர் தரப்பில் அரசு ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் இல்லை என்றும், உதவி ஆய்வாளர் விசாரித்து நீதிமன்றத்தில் உறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கில் தொடர்பில்லாத ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.சந்திரசேகரன் பிறப்பித்த உத்தரவில், 2022ஆம் ஆண்டு மே மாதமே இறுதி அறிக்கை தயாரான நிலையில், அக்டோபர் மாதம் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, உதவி ஆய்வாளருக்கு மேலே உள்ள ஆய்வாளர் தான் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்பட்டதா? என கண்காணிக்க வேண்டிய தகுதியான அதிகாரி என்பதால், ஆய்வாளர் தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் நீதிமன்ற உத்தரவை உரியக் காலத்தில் நிறைவேற்றாத ஆய்வாளர் வேல்முருகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த தொகையைத் தலைமை நீதிபதிகள் நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அமலாக்கத்துறை இயக்குனரின் பணி நீட்டிப்பு... செப்.15 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.