ETV Bharat / state

உதயநிதி அமைச்சராக வர அனைத்து தகுதியும் கொண்டவர் - மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Nov 27, 2022, 12:45 PM IST

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராகும் அனைத்து தகுதியும் இருக்கிறது - மா.சுப்ரமணியன்
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராகும் அனைத்து தகுதியும் இருக்கிறது - மா.சுப்ரமணியன்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராகும் அனைத்து தகுதியும் இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட குடிசைவாழ் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஆரவாரம் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிசைப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில், மருத்துவ முகாம் ஐந்து விளக்கு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையான நாளாக அமையும்.

அடுத்த பிறந்தநாளை அமைச்சராக உதயநிதி கொண்டாடினால் மகிழ்ச்சிதான். அமைச்சராகும் அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது. திமுகவின் அடித்தளம் வலுவாக இருக்க 30 லட்சம் இளைஞர்கள் உழைக்கின்ற உயிரோட்டமுள்ள அமைப்பாக இளைஞரணி உள்ளது. பிற கட்சிகள்போல சம்பிரதாயத்திற்கு இருக்கும் அமைப்பு அல்ல திமுக இளைஞரணி. சமுதாயத்திற்காக உழைக்கும் அமைப்பு. 30 லட்சம் இளைஞர்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் தலைவராக இருப்பதால், அமைச்சராவதற்கு எல்லா தகுதிகளும் கொண்டவர் உதயநிதி.

சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், கொரோனா பூஜ்ஜிய நிலையை நோக்கியே தமிழ்நாடு செல்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் தளர்த்தி வருகிறது” என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

"மருத்துவமனைகளில் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு தளர்வு"

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”இந்தியாவில் விமானங்களில் பயணம் செய்ய ஆர்டிபிசிஆர்RTPCR) பரிசோதனை தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் 2 சதவீதம் ரேண்டமாக பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் தளர்வு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, சமீபத்தில் எச்1என்1 காய்ச்சல் பரவியபோது வாயில் இருந்து வரும் நீர் திவளைகளால் நோய் தொற்று பரவும் என்பதால் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறினோம்.

முகக்கவசம் பொது இடங்களிலோ, கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களிலோ அணிவது அவர்களின் பாதுகாப்புக்கானது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் பணம் சென்று சேர்வதில் எந்த சிக்கலும் இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

800 அரசு மருத்துவமனைகளிலும், 900 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1,513 சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 1 லட்சமாக இருந்ததை, 5 லட்சமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்கியுள்ளார். இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 22 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக கொடியை பயன்படுத்தி வரைந்த உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.