என்னதான் ஆச்சு என்ஜினியரிங் படிப்புக்கு? தெறித்து ஓடும் மாணவர்கள்.. கல்வியாளர்கள் கூறுவது என்ன?

author img

By

Published : Nov 24, 2022, 10:38 PM IST

Updated : Nov 25, 2022, 6:15 PM IST

Etv Bharat

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவில் மாணவர் சேர்க்கை நிலவரம் பல கல்லூரிகளில் பரிதாபமாக இருப்பதால் கல்வித்தரம் பாதிக்கக்கூடும் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சென்னை: பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒற்றை சாளர முறை கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் 1 லட்சத்து 650 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 53 ஆயிரத்து 628 இடங்கள் காலியாக உள்ளன. 22 ந் தேதி வரையில் 88 ஆயிரத்து 843 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 11 ஆயிரத்து 807 மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டி உள்ளது.

21வது நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஐடி துறையின் வளர்ச்சியால், பொறியியல் மாணவர்களுக்கு படிப்பை முடித்த உடன் வேலை, நல்ல சம்பளம், சமூகத்தில் மதிப்பு போன்றவை கிடைத்தன. இதனால் தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல் பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. ஆனால் நாளடைவில் படிப்படியாக குறைந்த டிமாண்ட் தற்போது கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க ஆள்வைத்து தேட வேண்டும் என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டிற்கு முன்னர் 500க்கும் அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது 446 என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது. கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, கல்வித் தரமும், உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்காததால், தரமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமை , தாெழில்துறைக்கு தேவையான வகையில் தயார் செய்யாமை போன்றவற்றால் திறன் மிகுந்த இளைஞர்கள் தயாராகவில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய உயர்கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், நிறைய கல்லூரியில் ஒற்றை, இரட்டை இலக்க எண்ணில் மாணவர்கள் சேர்க்கை இருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது கல்லூரிகளில் உட்கட்டமைப்பினை வைத்து, ஆசிரியர்களுக்கு சம்பளம் அளித்து செயல்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்புகிறார். கலந்தாய்வு முறையில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விபரம்..
2022-23 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விபரம்..

மாணவர் சேர்க்கை புள்ளி விபர தரவுகளை கொண்டு, கல்லூரி நடக்குமா, நடக்காதா என்பதை அண்ணா பல்கலைக் கழகம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறும் அவர், மாணவர்களின் எதிர்காலம் வீணடிக்கப்படுவது வருத்தமாக இருக்கிறது என ஆதங்கம் தெரிவித்தார்.

தமிழ்நாடு என்ஜினியரிங் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், புள்ளி விவரங்களை ஆராய்ந்த உயர்கல்விக்கான ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. , 25 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்கள் 88 கல்லூரிகளில் நிரம்பி இருக்கின்றன. 177 கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்கள் கூட நிரம்பாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நிறைய கல்லூரிகள் வரக்கூடிய காலங்களில் மூடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது என எச்சரிக்கை விடுக்கிறார். அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழு விதிமுறைகளின் படி 60 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விதியையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஒற்றை இலக்கத்தில் நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்து அறிவதற்காக தொழில்நுட்பகல்வி இயக்குனர் லட்சுமிபிரியாவை ஈடிவி பாரத் அணுகியது. இது குறித்து பேசிய அவர், ஒற்றை இலக்க சேர்க்கை நடைபெற்ற கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், வேறுகல்லூரியில் சேர விரும்பினால் , அவர்களின் தரவரிசைப்படி மாற்றி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

என்னதான் ஆச்சு என்ஜினியரிங்குக்கு? தெறித்து ஓடும் மாணவர்கள்.. கல்வியாளர்கள் கூறுவது என்ன?

இதையும் படிங்க: கோவை: ரூ.6 கோடியில் நாட்டின் முதல் இன்ஜினியரிங் மியூசியம்!

Last Updated :Nov 25, 2022, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.