ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட தேர்தலில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், இரண்டாயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், நான்காயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவர்கள் மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இரண்டாம்கட்ட தேர்தலில், 158 ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், இரண்டாயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், நான்காயிரத்து 924 கிராம ஊராட்சித் தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 77.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, இன்று காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. மேலும், பதவிகளுக்கான நிறங்கள் வாரியாக மாவட்ட ஊராட்சி வார்டு - மஞ்சள், ஊராட்சி ஒன்றிய வார்டு தலைவர் - பச்சை, சிற்றூராட்சி வார்டு தலைவர் - இளஞ்சிவப்பு, கிராம ஊராட்சி வார்டு - வெள்ளை, நீலம் எனப் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையை கேமராவில் பதிவு செய்ய வேண்டும் - திமுக மனு