ETV Bharat / state

டிசம்பர் இறுதிவரை மழைதான்.. சென்னை வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 2:32 PM IST

Etv Bharat
Etv Bharat

TN Rain update: தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று (டிச.24) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை (டிச.25) மற்றும் நாளை மறுநாள் (டிச.26) தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனையடுத்து வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகளான குமரிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனையடுத்து, வருகிற 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல், வங்கக்கடல் பகுதிகளான தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனையடுத்து, வருகிற 28ஆம் தேதி அன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென்மாவட்ட வெள்ள பாதிப்பு; நிவாரணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.