ETV Bharat / state

தாம்பரத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு

author img

By

Published : Mar 4, 2023, 3:53 PM IST

தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட வந்திருந்தனர். கடந்த சில நாட்களாகவே வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பரவி வந்த வதந்தியால் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்படுவதாக தகவல் வெளியானது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு

இதனையடுத்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர், வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வருகிற 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் பதில் அளித்துள்ளனர்.

இருப்பினும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. அதிலும், ஹோலி பண்டிகைக்காக ஜார்கண்ட் செல்லும் ரயிலில் செல்வதற்காகவே வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்னர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞர்களை தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்காக ரயில் நிலையங்களில் படை எடுத்து வருகின்றனர். அதேநேரம் வட மாநில தொழிலாளர்களால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக ஒரு தரப்பும், அவர்களால் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகிறது என ஒரு தரப்பும் கூறி வருகிறது.

இது குறித்து வடமாநில தொழிலாளர் ஒருவர் கூறுகையில், “நான் கடந்த 16 வருடங்களாக சென்னையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோவைப் பார்த்தேன். அதனால் இனி வெளிமாநில தொழிலாளர்களுக்கு, தமிழ்நாட்டில் பாதுகாப்பு இருக்காது என்பதன் அடிப்படையில் நாங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்கிறோம்” என கூறினார்.

இது குறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில், பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல் துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்குச் சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே வெளி மாநிலத்தவர்கள் வருவதற்கான காரணம் ஆகும். அனைவருமே எங்கள் தொழிலாளர்கள்தான். வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற வதந்தி வீடியோ பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு” என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசிற்கு துணை நிற்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனிடையே பீகார் மாநில அரசு, 4 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை பீகார் மாநில தொழிலாளர்களின் உண்மை நிலையை கண்டறிய தமிழ்நாட்டிற்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் இந்தியாவுக்கு எதிரானவர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.