சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சேமசுந்தரம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் பயணம் செய்ய 2 ஆயிரத்து 926 ரூபாய்க்கு அரசு போக்குவரத்து கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் முன்பதிவு செய்தார். அதன்படி அவர்கள் பயணித்தபோது மழை பெய்ததால் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதுடன், இருக்கைகளும் ஈரமடைந்தன. இதனால் சோமசுந்தரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதன்பின் மதுரையிலிருந்து கொடுக்கப்பட்ட பேருந்திலும் இருக்கைகள் சரியில்லாமல் இருந்துள்ளது. அதன்காரணமாக டீலக்ஸ் பயணத்திற்கு பணம் பெற்றுக்கொண்டு மோசமான பயண அனுபவத்தை கொடுத்தால் போக்குவரத்து கழகம் 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நாகப்பட்டிணம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தட்சிணாமூர்த்தி, உறுப்பினர்கள் கமல்நாத், செந்தமிழ் செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், சோமசுந்தரம் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய், அல்ட்ரா டீல்க்ஸ் பயணத்திற்கு செலுத்திய கட்டணத் தொகை 2 ஆயிரத்து 926 ரூபாய் ஆகியவற்றை சேர்த்து 62 ஆயிரத்து 926 ரூபாயை செலுத்த போக்குவரத்து கழகம் அபராதமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை