ETV Bharat / state

கொடைக்கானல் பாதரச ஆலை பிரச்னை: விதிகளை மீறும் ஆலை நிர்வாகம்

author img

By

Published : Jun 24, 2021, 9:51 AM IST

Updated : Jun 24, 2021, 11:42 AM IST

கொடைக்கானல் பாதரச ஆலை
கொடைக்கானல் பாதரச ஆலை

கொடைக்கானல் பாதரச ஆலையின் (HUL) அங்கீகாரம் இல்லாத நடவடிக்கையின் காரணமாக கொடைக்கானல் கானுயிர் சரணாலயத்துக்கு ஆபத்து என சிவில் சொசைட்டி செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: பாதரச மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கொடைக்கானல் ஆலைப் பகுதியில் உள்ள பாதரசத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவை நிறைவேற்றுவதில் யுனிலீவர் தோல்வி கண்டுள்ளது.

'ஆலை நிர்வாகம் சட்டவிரோதமாகச் செய்துகொண்டிருக்கும் பாதரசத்தை அகற்றும் வேலையை நிறுத்த உத்தரவிட வேண்டும்' என உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழுவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் சுற்றுச்சூழல் குழுவின் உறுப்பினர் நௌரோஸ் மோடியும், சென்னையிலிருந்து செயல்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகிய நித்தியானந்த் ஜெயராமனும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மேற்படி வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் அனுப்பிய கடிதத்தில், "2018ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இரண்டு உத்தரவுகளை அளித்தது.

1) தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து செல்லத்தக்க அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்னரே பாதரசத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

(2) மிக விரிவான வகையில் பகுதியைப் பற்றிய மதிப்பீடும், உயிர்ச்சூழல் இடர் குறித்த மதிப்பீடும் செய்யப்பட வேண்டும்.

உத்தரவு வெளியாகி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு எதனையும் செய்யவில்லை. மேலும், அபாயகர மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016இன்படி, செல்லத்தக்க உரிமம் அளிக்கப்படாமல் மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த மண்ணை தோண்டியெடுப்பதற்கும், அதனைச் சுத்தம் செய்து பாதரச கழிவுகளைக் கையாளுவதற்கும் யுனிலீவர் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அளித்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசின் உத்தரவுக்கு ஆதரவாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். அப்போது தெரிவிக்கப்பட்ட கருத்து கொடைக்கானல் விவகாரத்துக்குப் பொருத்தமானதாகும். ஸ்டெர்லைட் ஆலை அபாயகரக் கழிவுகளைக் கையாளுவதற்கான உரிமம் இல்லாது இயங்கியதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அப்போது நீதிமன்றம், “இது மிகவும் கவலைக்குரிய பிரச்னையாகும். அளிக்கப்பட்ட அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் விட்டது ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லி மனுதாரர் தப்பித்துக்கொள்ள முடியாது.

அப்படியென்றால், இயங்குவதற்கான ஒப்புதல் பெற்ற ஒரு மாசுபடுத்தும் ஆலை, அபாயகர கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி அங்கீகாரம் பெறாமல், அதாவது கண்காணிப்பு இல்லாமலேயே, தொடர்ந்து அபாயகர கழிவுகளை உற்பத்தி செய்யலாம், கையாளலாம், வெளியேற்றலாம் என்று பொருளாகிறது. இந்த நிலையை அனுமதித்தால், அது சாவு மணியின்றி வேறொன்றுமில்லை” எனத் தெரிவித்தது.

பாதரசம், உயிர்களின் நரம்பு மண்டலத்தில் நஞ்சை விதைக்கும் தன்மைகொண்டது. பாதரசத்தின் கரிம கூட்டுப்பொருள்கள், நீர் உயிர்ச்சூழலில் கலக்கும்போது மிகவும் அபாயகரமானவையாக மாறுகின்றன. பாதரச ஆலையின் எல்லைகளில் ஒன்றாகக் கொடைக்கானல் கானுயிர் சரணாலயம் உள்ளது. ஆலையின் நீர் பாம்பாறு வனத்துக்குள் பாய்கிறது.

அந்த நீர் பாம்பாறு ஓடையின் வழியாக, வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் பாய்கிறது. மண்ணில் கலந்துள்ள பாதரசம், தொடர்ந்து பாம்பாறு வனத்துக்குள் பாய்ந்துகொண்டுள்ளது. விளைவாக, நீர் மண்டல உணவு சங்கிலிக்குள் பாதரசத்தின் அளவு அதிகரிக்கும். மீனை உண்கின்ற, நீர் வாழ் சிற்றுயிர்களை உணவாக்கிக்கொள்கிற விலங்குகள், பறவைகளின் உடலில் மிக அதிக அளவுக்குப் பாதரசம் அதிகரிக்கும்.

ஹைதராபாத் ஐஐடியைச் சேர்ந்த முனைவர் அசிஃப் குவார்ஷி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பாறு ஓடையால் நீர் பெறுகின்ற பெரியகுளம் சமவெளியில் உள்ள குளத்தின் மீனில் பாதரச கழிவு இருப்பதை ஆய்வுசெய்து கண்டுபிடித்தார். அவர் எடுத்த அனைத்து மீன் மாதிரிகளிலும் கவலைக்குரிய அளவுக்குப் பாதரசம் இருந்தது. கருவுற்றப் பெண்கள் அந்த மீனை உட்கொள்ள நேர்ந்தால் கருவுக்குப் பாதிப்பு ஏற்படும் அளவுக்குப் பாதரசம் இருந்தது.

சட்டவிரோதமாகப் பாதரச மணலைத் தோண்டுவதை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடுங்கள் என்று சுற்றுச்சூழல் அமைச்சருக்கு வேண்டுகோள்விடப்பட்டது. மணலை தோண்டுவதற்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி விரிவான ஆய்வினை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்றும், நமது நாட்டின் சட்டங்களை மதிக்காத யுனிலீவரையும் அதன் நிர்வாகிகளையும் தண்டிக்க வேண்டும்.

கொடைக்கானல் நகரத்தின் மையத்தில், சட்டவிரோதமாகப் பாதரச கழிவுகளை யுனிலீவர் கொட்டிவைத்திருப்பதை 2001ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உள்ளூர்வாசிகளும், செயல்பாட்டாளர்களும் கண்டுபிடித்தனர். அபாயகர கழிவுகள் விதிகளின்கீழ் பாதரச ஆலையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடியது. இப்போது, 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எந்தப் பயமுமின்றி அபாயகர கழிவு விதிகளை ஆலை நிர்வாகம் மீறிக்கொண்டே வருகிறது.

யுனிலீவரின் தலைமையகங்கள் நெதர்லாந்திலும், பிரிட்டனிலும் உள்ளன. அங்கெல்லாம் சட்ட மீறல் செய்யும் துணிச்சல் யுனிலீவருக்குக் கிடையாது. ஆனால், நமது நாட்டின் சட்டங்களை அவர்கள் மதிப்பதில்லை. கம்பெனியின் இரட்டை அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம் தற்போதுள்ள யுனிலீவரின் கொடைக்கானல் பாதரச சுத்திகரிப்பின்படி, குடியிருப்புப் பகுதிகளுக்கான அனுமதிக்கத்தக்கப் பிரிட்டன் அளவைக் காட்டிலும் 20 மடங்கு கூடுதல் பாதரசமும், நெதர்லாந்து தர நிர்ணயத்தின்படி 66 மடங்கு கூடுதல் பாதரசமும் கொடைக்கானல் மண்ணில் தங்கிவிடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெட்டப்படும் மரங்கள்.... கலங்கும் சமூக ஆர்வலர்கள்

Last Updated :Jun 24, 2021, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.