ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் - தீபா தரப்புக்கு இறுதி அவகாசம்!

author img

By

Published : Mar 16, 2023, 10:54 PM IST

Etv Bharat

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் பதிலளிக்க இறுதி கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம், 1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15 (2) (a)இன் படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என தீர்ப்பளித்தது.

இதனையடுத்து போயஸ் கார்டன் இல்ல சொத்துக்கள் தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சகோதரர் நான் என்றும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியினுடைய மகன் என்றும், வழக்கைக் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், ஆனால் சில பிழைகள் காரணமாக மனு திருப்பி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கரோனா ஊரடங்கு மற்றும் தனக்குள்ள இதய நோய் காரணமாக இந்த வழக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியான ஜெயம்மாவின் மகன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தன் தந்தை ஜெயராமன், வேதவள்ளி என்ற வேதம்மாவை 2வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், 2வது மனைவிக்கு பிறந்தவர்கள்தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்றும் தெரிவித்துள்ள அவர், ஜெயக்குமாரின் வாரிசுகள் தான் தீபா, தீபக் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1950ஆம் ஆண்டு ஜெயராமனிடம் ஜீவனாம்சம் கேட்டு, மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் தாக்கல் செய்த வழக்கில் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதாவை பிரதிவாதிகளாக சேர்த்ததையும் சுட்டிக்காட்டிய அவர், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தனக்கும் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

காலதாமதமாக தாக்கல் செய்யபட்ட இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா மற்றும் தீபக் சார்பில் பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ‘கடந்த ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து பதிலளிக்க காலதாமதம் செய்வது ஏன்?’ என கேள்வி எழுப்பி வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார். தொடர்ந்து, தீபா மற்றும் தீபக் சார்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை ஏற்காத நீதிபதி, ‘இனியும் பதிலளிக்க காலஅவகாசம் வழங்க முடியாது. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: தேவேந்திர பட்னாவிஸ் மனைவிக்கு ரூ.1 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கு: ஆடை வடிவமைப்பாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.