ETV Bharat / state

அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?

author img

By

Published : May 27, 2022, 7:15 PM IST

Updated : Jun 4, 2022, 1:17 PM IST

அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?
அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?

சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தா தனித் தீவை வாங்கி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரது உடல் நிலை குறித்த தகவல்கள் அவரது பக்தர்களை கவலையடையச் செய்துள்ளன.

2019ஆம் ஆண்டு கைலாசா எனும் தனி நாட்டை அறிவித்ததிலிருந்து இதுவரை உற்சாகத்தற்கு சற்றும் குறைவின்றி வலம் வந்த நித்தியானாந்தா, சமீப நாட்களாக உடல்நலக்குறைவாக இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டு சில முகநூல் பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்... இது குறித்த உண்மையை கண்டறிய முற்பட்ட போது அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் நமக்கு கிடைத்தன...

நாம் வெளியே பார்ப்பது நித்யானந்தா மட்டும் தான் என்றாலும் அவருக்கு பின்னணியில் பல வெளிநாட்டு செல்வந்தர்கள் உள்ளனர். நித்யானந்தாவின் சீடர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் செல்வாக்கு மிக்க பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதன் காரணமாகவே தனி நாடு, தனி மக்கள், தனி பணம் என நித்யானந்தாவால் செல்வாக்கு செலுத்த முடிகிறது என அவரது சீடர்களே கூறுகின்றனர்.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் நித்யானந்தா, கைலாசாவுக்குச் சென்றது முதலே உற்சாகமாகத்தான் வலம் வருகிறார். லாக் டவுண் காலத்தில் கூட நித்யானந்தாவின் உற்சாகத்துக்கு குறைவில்லை. உலகமே கரோனாவால் அவதிப்பட்டு வந்த போதிலும் நித்யானந்தாவின் கைலாவில் அனைவரும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றி தான் வலம் வந்தனர்.

கரோனாவெல்லாம் முடிந்த பின்னர்தான் கைலாசா புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தனி தீவில் ராஜாவாக வலம் வந்தாலும் நித்தியானந்தாவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சமூக வலைத்தளங்களில் சத்சங்கம் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்த நித்யானந்தா, திடீரென மாயமானார். சமூக வலைத்தளங்களிலும் அவரது பழைய வீடியோக்களே வெளியிடப்பட்டு வந்தன.

கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி 2 வாரங்களில் நித்யானந்தாவின் தரிசனம் கிடைக்காமல் பக்தர்கள் தவித்துப் போயினர். நித்யானந்தா காலமாகிவிட்டதாகவும் சில தகவல்கள் உலவவிடப்பட்டன. வழக்கமாக மே 1ஆம் தேதி வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் கொண்டவர் நித்யானந்தா. ஆனால், அன்றைய தினமும் அவருடைய பழைய புகைப்படம் ஒன்றே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக நித்யானந்தாவின் கைலாசா முகநூல் பக்கத்தில் மே 11ஆம் தேதி ஒரு பதிவு வெளியிடப்பட்டது அதில், தான் சாகவில்லை என்றும் சமாதியில் இருப்பதாகவும் நூதன விளக்கம் அளித்திருந்தார் நித்யானந்தா. தனது உடல்நலன் குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் மருத்துவ சிகிச்சையிலிருந்து இன்னமும் மீளவில்லை என்றும் 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் கூறினார். பேச்சுவரவில்லை, மனிதர்கள் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் நித்யானந்தா தமது பதிவில் கூறியிருந்தார். இது தான் பரபரப்பை பற்ற வைத்தது.

அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?
அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?

முதன்முறையாக நித்யானந்தாவின் உடல்நலன் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக இது உறுதி செய்தது. அத்துடன் நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக அவரது சில புகைப்படங்களும் வெளியிடப்பட்ட வழக்கமாக தேஜசுடன் காணப்படும் நித்யானந்தால், களையிழந்தவராக, உடல் மெலிந்து சோர்வாக காணப்பட்டார். புகைப்படத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக தாள் ஒன்றில் நித்யானந்தா அன்றைய தேதியை எழுதுவது போன்ற புகைப்படமும் வெளியிடப்பட்டது.

அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?
அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?

நித்யானந்தா உயிருடன்தான் இருக்கிறார் என நம்ப வைக்க வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் கைலாசாவுக்கு வேறு விதமான பலன்களை கொடுத்தது. உலகெங்கிலும் உள்ள நித்யானந்தாவின் பக்தர்கள் பதறித்துடித்தனர். கைலாசாவின் கஜானா பக்தர்கள் பதறியடித்து கொடுத்த பணத்தால் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பின்னர் இன்று வரையிலும் நித்யானந்தா நேரடியாக முகநூலில் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். பல மாதங்கள் பழைய வீடியோக்களே அவரது மடத்தின் நிர்வாகிகளால் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இதன் பின்னர் நித்யானந்தாவின் அடுத்த ஹல்த் அப்டேட் மே 16ஆம் தேதி வெளியானது. அதில் நித்யானந்தாவுக்கு கேன்சர் இல்லை, டியூமர் இல்லை, இதயக் கோளாறு இல்லை, கல்லீரல் பிரச்சனை இல்லை, ரத்த கொதிப்பு இல்லை, சுகர், கொழுப்பு இல்லை கிட்னி, நுரையீரல் சிறப்பாக செயல்படுகிறது என்ற தகவல்கள் எல்லாம் இடம்பெற்றிருந்தன. எந்த நோயும் இல்லை என்பதை நானே என்னுடைய மூன்றாவது கண்ணால் உறுதி செய்து கொண்டேன் ஆனாலும் சும்மா கிராஸ் செக் செய்வதற்காக டாக்டர்களை அனுமதித்தேன் என நித்யானந்தா கூறியுதாக இடம் பெற்றிருந்தது அந்த பதிவு.

அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?

ஆனாலும் சாப்பிட முடியவில்லை, தூக்கமில்லை, உடலில் அசைவில்லை என பிரச்சனைகளைப் பற்றியும் அந்த பதிவு கூறத்தவறவில்லை, “என்னுடைய ஜாதகப்படி எல்லா கட்டமும் சரியாக இருப்பதால் தற்போதைக்கு நான் சாக வாய்ப்பில்லை” என கூறியிருந்தார். அத்தோடு “யாரும் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம்” என சூசகமான சிக்னல் ஒன்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பேச முடியவில்லை, எழுத முடியவில்லை என்றாலும் தன் கையால் தானே டைப் செய்து இந்த தகவல் அத்தனையும் முகநூலில் பதிவிடுவதாக கூறியிருந்தார் நித்யானந்தா.

கைலாசாவிலிருந்து வரும் கட்டளைக்கேட்ப உள்ளுரில் உள்ள நித்யானந்தாவின் சீடர்களும் திருவண்ணாமலையில் உள்ள அருணகிரிநாதரின் சிலை முன்பாக வழிபாடு நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த அப்டேட்டுகளில் சமாதி, தியானம் என குழப்பினாலும் நித்யானந்தாவின் உடல் நிலை தற்போது கோளாறாக உள்ளது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. இது தொடர்பாக கைலாசாவாசிகளுடன் தொடர்பில் இருக்கும் சிலரிடம் விசாரித்தோம், அவர்கள் கூறுவதை பொறுத்த வரையிலும் கைலாசாவில் தற்போது கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவுகிறது என கூறுகின்றனர். தனக்கென ஒரு தனி நாட்டை நிறுவிக்கொண்டு வாழ்ந்தாலும், மருத்துவ வசதிகள் தற்போதும் கைலாசாவில் சவாலாகவே இருப்பது நித்யானந்தாவின் முகநூல் பதிவுகள் மூலமாகவே தெரிய வருகிறது.

இயல்பில் மெலிந்த தேகம் கொண்டிருந்த நித்யானந்தாவுக்கு வழக்கு, வாய்தா என சிக்கிய பிறகு அசாதாரணமாக உடல் எடை அதிகரித்திருந்தது. கைலாசாவுக்கு சென்ற பின்னர் தீவிரமான எடைக்குறைப்பில் ஈடுபட்டிருந்தார். சில மாத முயற்சிகளுக்கு பின்னர் பல கிலோக்களை இழந்து தான் இப்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாக வீடியோவும் வெளியிட்டிருந்தார் நித்யானந்தா. யூடியூபில் பிரபலமான சாப்பாட்டு ராமன் புகழ் சித்த மருத்துவரின் இஞ்சி சாறு தனக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தீவிர உடல் எடைக்குறைப்பு முயற்சிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பில் இந்தியாவில் பாலியல், ஆள்கடத்தல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ள நித்தியானந்தா அனுதாபம் தேட முயற்சிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல நன்கொடையும் ஒருபுறம் கொட்டுகிறது, வழக்குகளிலிருந்து விடுபட வழிகிடைக்காதா என்ற தேடலும் மறுபுறம் நீள்கிறது.

என்னதான் தனி நாடு என்று கூறிக்கொண்டாலும், சிறைபோன்ற வாழ்க்கை கஜானாவை பதம் பார்க்கும் செலவுகள் உள்ளிட்டவை சொந்த ஊர் திரும்பும் நித்யானந்தாவின் ஆசையை தூண்டுகிறது என்றே கூறுகின்றனர். நித்தியானந்தா கூறும் தனி நாட்டில் இருப்பது அவருக்கும் ஒரு வகையில் ஆபத்துதான் என கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள், தற்போது இருக்கும் கைலாசா எந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு இயங்கும் என்பதும் கேள்விக்குறிதான். இந்தியாவில் இருந்தால் நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தாலும், சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் சிறையில் இருந்தாலும் அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும்.

நன்கொடை என்ற பெயரில் வசூலித்த கடல்போன்ற சொத்துக்கள், மடத்தின் தலைவர் பதவியின் சர்வாதிகாரம் உள்ளிட்டவை நித்தியானந்தாவுடன் நெருக்கமாக உள்ள சிலருக்கும் ஆசையை தூண்ட வாய்ப்புள்ளது. வதந்திகளுக்கு பதிலளிக்கிறோம் என்ற பெயரில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் முகநூலில் எழுதிக்கொடுத்ததை ஆங்கிலத்திலும் தமிழிலும் பதற்றத்துடன் மாறி மாறி ஒப்புவித்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் நித்தியானந்தா நேரில் தோன்றி விளக்கம் அளித்தால் தான் மர்மம் விலகும் என அவரது பக்தர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நித்யானந்தா இட்லி சாப்பிட்டாரா?… ஃபேஸ்புக்கில் கொடுத்த பகீர் விளக்கம்!

Last Updated :Jun 4, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.