ETV Bharat / state

சுகாதாரத்துறையில் 800 ஓட்டுநர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை!

author img

By

Published : Jun 8, 2023, 1:51 PM IST

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 டிரைவர்கள் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாரத்துறை டிரைவர்களை பணியமர்த்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்
சுகாரத்துறை டிரைவர்களை பணியமர்த்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 பேர் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், கரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், பணி நிரந்தரம் வழங்கும் போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசும் உத்தரவிட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

ஆனால், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசுக்கு அளித்த விண்ணப்பங்கள் மீது அரசு எந்த முடிவும் எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவதாகவும், காலியாக உள்ள 800 டிரைவர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்காமல், டிரைவர் பணி காலியிடங்களை நிரப்பத் தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 800 டிரைவர் பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஆம்புலன்ஸ் டிரைவர்களை பணி நீக்கம் செய்யவும், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார். மேலும் மனுவுக்கு பதிலளிக்கும் படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் ஜூலை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு புதிய சிக்கல்.. டெண்டர் முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.